Thursday, December 27, 2018

பேறை நகர் (பெரும்பேறு கண்டிகை):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு சிவ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள்


தலக்குறிப்புகள்:

மதுராந்தகத்திலிருந்து 22 கி.மீ தொலைவிலும், அச்சரப்பாக்கத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது பெரும்பேறு கண்டிகை எனும் திருப்புகழ் தலம் (தற்கால வழக்கில் பெரும்பேர் கண்டிகை).

பிரதானச் சாலையிலிருந்து இவ்வூருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில் காணப்படும் 'தட்சிணா மூர்த்தியின்' பிரமாண்டமான சிலையினைக் கொண்டே இத்தலத்திற்கான மார்க்கத்தினை உறுதி செய்து கொள்ளலாம். சுமார் 200 படிகளோடு அமைந்துள்ள மலைக்கோயில், வாகனம் மூலமாக பயணிக்க மலைப்பாதையும் உள்ளது.

மலைக்கோயிலில் திருப்புகழ் தெய்வத்தைத் தரிசிக்கு முன்னர் அடிவாரத்தில் சுமார் 1/2 கி.மீ தூரத்தில், சிறு ஆலயமொன்றில் எழுந்தருளியுள்ள 'ஸ்ரீதான்தோன்றீஸ்வர மூர்த்தியை' தரிசித்துச் செல்லுதல் மரபு, அகத்தியருக்குச் சிவபெருமான் திருமணக் கோலம் காண்பித்து அருள் புரிந்த தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மலைக்கோயிலில் சிவசுப்ரமண்ய சுவாமி ஆறு திருமுகங்களுடனும், இரு தேவியருடனும், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். அகத்திய மாமுனிக்கு திருக்காட்சி தந்து அருள் புரிந்துள்ள இத்தல மூர்த்தியைப் பாம்பன் சுவாமிகள் நேரில் தரிசித்துப் 'பெரும்பேறு பதிகம்' எனும் பாடல் தொகுப்பினை அருளியுள்ளார். மூல மூர்த்தியான வேலாயுத தெய்வத்திற்கு நேரெதிரில் இடது புறத்தில் அகத்தியர், அருணகிரிப் பெருமான், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் அருகருகே எழுந்தருளி இருப்பது ஆனந்தத் திருக்காட்சி.

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

நீலமயில் சேரும் அந்தி மாலை நிகராகி !அந்த
     காரம் மிகவே நிறைந்த குழலாலும்

நீடும் அதிரேக இன்பமாகிய சலாப சந்த்ர
     நேர்தரு முகார விந்தம்... அதனாலும்

ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள்
     ஆசைவலை வீசு கெண்டை... விழியாலும்

ஆடிய கடாம் இசைந்த வார்முலைகளாலும் !அந்த
     னாகி மயல் நான்உழன்று... திரிவேனோ

கோல உருவாயெழுந்து பார்அதனையே இடந்து
     கூவிடு முராரி விண்டு... திருமார்பன்

கூடமுறை நீடு செம்பொன் மாமதலை ஊடெழுந்த
     கோபஅரி நாரசிங்கன்... மருகோனே

பீலிமயில் மீதுறைந்து சூரர்தமையே செயங்கொள்
     பேர்பெரிய வேல்கொள் செங்கை... முருகோனே

பேடைமட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற
     பேறைநகர் வாழ வந்த... பெருமாளே.


(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

1 comment:

  1. Dear Sir - The Google Maps link for the temple is incorrect. It points to Acharapakkam and not Perumber Kandigai. The correct link is given below. Request you to edit the page. Thanks.

    https://www.google.co.in/maps/place/Sri+Sivasubramanian+Swamy+Temple/@12.3783034,79.783349,16.5z/data=!4m12!1m6!3m5!1s0x3a5317afd178b107:0xecd7cb6a0dcff186!2sPerumber+Kandigai+Murugan+Temple!8m2!3d12.4035198!4d79.8156667!3m4!1s0x0:0x1917fcfd3289d164!8m2!3d12.3794977!4d79.7827765

    ReplyDelete