(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திடவிய நெஞ்சுடை அடியர் இடும்பை கெடும்படி
தீயாங்குறை போய் ஆழ்ந்தது ....1
செயசெய என்றிசை பரவிய எங்கள் கொடுங்கலி
தேசாந்தரமே சாய்ந்தது ....2
செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்
தீமான்கதர் தாம்ஏங்கினர் ....3
சிகர தரங்கித மகரநெருங்கு பெருங்கடல்
தீமூண்டுதன் வாய்மாண்டது ....4
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ
மாறாங்கிரி நூறாந்தொளை ....5
சிகர நெடுங்கிரி குகைகள் திறந்து திகந்தமும்
லோகாந்தமு நீர்தேங்கின ....6
சிறையுள் அழுந்திய குறைகள் ஒழிந்து செயங்கொடு
தேவேந்திரர் சேணாண்டனர் ....7
திரிபுவனங்களும் ஒருபயம் இன்றி வளங்கெழு
சீர்பூண்டற நேர்பூண்டன ....8
விட வசனஞ்சில பறையும் விரிஞ்சன் விலங்கது
கால்பூண்டுதன் மேல் தீர்ந்தனன் ....9
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில்
வீவான்பொழில் பூவாய்ந்தது ....10
விழைவு தரும்பத சசிதன் விளங்கிய மங்கல
நூல்வாங்குகிலாள் வாழ்ந்தனள் ....11
வெருவி ஒதுங்கிமையவர் எவருஞ்சிறை வென்றித
மேலாம்படியே மீண்டனர் ....12
விழியொர் இரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்
மேல்வாங் கிளை கால்சாய்ந்தது ....13
வெளிமுழுதுந் திசை முழுதும் விழுங்கி எழுங்கன
சூர்மாண்டற வேர்மாய்ந்தது ....14
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு
மேடாம்படி பாடோங்கின ....15
மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென
ஊனார்ந்தகல் வானார்ந்தன ....16
அடவிபடுஞ் சடை மவுலியில் வெம்பணி அம்பணி
ஆமாங்கதர் வாமாங்கனை ....17
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பை த்ரியம்பகி
ஆசாம்பரை பாசாங்குசை ....18
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு ....19
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மானாங்கணி ஞானாங்குரை ....20
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்தழல்
வாய்கான்றிடு நாகாங்கதை ....21
அபயவரம்புரி உபய கரந்திகழ் அந்தணி
ஆமாங்கறி தாய் மாண்பினள் ....22
அதுலை தருந்திரு மதலை இபங்கொள் பயங்கொடு
பாய்மாண்கலை வாய்மாண்புன ....23
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர
ராசாங்கம் அதாராய்ந்தவன் ....24
வடவையிடும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய
மாடாம்புடை நாடாண்டகை ....25
வசை கருதுங் குரு பதியொடு தம்பியரும் !பட
வே பாண்டவர் தேரூர்ந்தவன் ....26
வளவில் வளர்ந்திடை மகளிர் குவிந்து தடங்குடை
வார்பூந்துகில் வார்பூம்பூயல் ....27
வரைநிரை கன்றின முழுதுமயங்கிய பண்கெழு
வேயேந்திய வாயான் !கழல் ....28
மருதிடை சென்றுயர் சகடு தடிந்தடர் வெம்புளை
வாய்கீண்டொரு பேய் காய்ந்தவன் ....29
மதசயிலம் பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக
மாமான் பகை கோமான்திரு ....30
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
வாகாம்பரை தோய் காங்கேயன் ....31
மகபதி தன்பதி பகைகிழியும்படி அன்றடல்
வாளோங்கிய வேல் வாங்கவே ....32
No comments:
Post a Comment