Thursday, December 27, 2018

விசுவை:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு அகிலாண்டேசுவரி அன்னை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் வட்டத்தில், உத்திரமேரூரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள மானாம்பதி எனும் சிற்றூரிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது விசூர் எனும் புண்ணியத் தலம் (ஆதியில் வழங்கி வந்த பெயர் விசுவை).

வெகு காலம் வரையினில் அறியப்படாதிருந்த இத்தலத்தின் அமைவிடம் திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய பெரிய முயற்சி மற்றும் ஆய்வினால் வெளிக்கொணரப் பெற்றது. அவசியம் திருப்பணி கண்டாக வேண்டிய நிலையிலுள்ள இப்பழமையான திருக்கோயில் பராமரிப்பு சிறிதுமற்ற நிலையில் விளங்கி வருகின்றது.

அம்பிகை விஸ்வரூப தரிசனம் அளித்து அருள் செய்த தலமாகையால் விசுவை, அடிப்படையில் சிவத்தலம், மூல மூர்த்தி அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார்;  அம்பிகை அகிலாண்டேஸ்வரி (அண்டங்கள் முழுவதிலுமாய் நிறைந்து விஸ்வரூப தரிசனம் அளித்தமையால்). திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் 'ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடனும், இரு தேவியருடனும், பின்புறம் விளங்கும் மயிலுடனும், நின்ற திருக்கோலத்தில்' எழுந்தருளி இருக்கின்றான். முன்னர் முருகக் கடவுளின் திருச்சன்னிதி வெளிப்பிரகாரத்தில் அமைந்திருந்ததாகவும் பின்னர் இடிபாடுகளின் காரணமாக வேலவனை உட்பிரகாரத்தில் சன்னிதி கொள்ளச் செய்ததாகவும் அறிகின்றோம்.

அருணகிரிநாதரின் திருப்பாதங்கள் தோய்ந்த தலம், அவசியம் தரிசித்துக் கந்தக் கடவுளின் திருவருட் செல்வத்தைப் பெற்று மகிழ்வோம்.

(Google Maps: Visoor, Tamil Nadu 603403, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

திருகு செறிந்த குழலை வகிர்ந்து
     முடிமலர் கொண்டொர்... அழகாகச்

செயவரு துங்க முகமும் விளங்க
     முலைகள் குலுங்க...வருமோக

அரிவையர் தங்கள் வலையில் விழுந்து
     அறிவு மெலிந்து...தளராதே

அமரர் மகிழ்ந்து தொழுது வணங்குன் 
     அடியிணை அன்பொடருள்வாயே

வரையை முனிந்து விழவெ கடிந்து
     வடிவெலெறிந்த... திறலோனே

மதுரித செஞ்சொல் குறமட மங்கை
     நகிலது பொங்க... வரும்வேலா

விரைசெறி கொன்றை அறுகு புனைந்த
     விடையரர் தந்த... முருகோனே

விரைமிகு சந்து பொழில்கள் துலங்கு
     விசுவை விளங்கு... பெருமாளே.


(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment