Wednesday, December 26, 2018

தச்சூர் (ஆண்டார்குப்பம்):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவள்ளூர்

திருக்கோயில்: அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் உள்ள திருத்தலம். செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம்.

அருணகிரிநாதர் 'தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே' என்று 'தச்சூருக்கு வடக்கில் அமைந்துள்ள' ஆண்டார்குப்பம் எனும் இத்தலத்தினைக் குறித்துள்ளார்.

(Google Maps: Andarkuppam Murugan Temple, Peravallur, Perambur, Chennai, Tamil Nadu 601204, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தத்தா தனத்தான தாத்தத் தனந்த
     தத்தா தனத்தான தாத்தத் தனந்த
          தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான

அச்சாய் இறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச்!சரங்க
          ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி

அத்தான் எனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தாய் எனப்பேசி மூக்கைச் சொறிந்து
          அக்கால் ஒருக்காலம் ஏக்கற்றிருந்திர் ...... இலைஆசை

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கிடங்கள்
     ஒப்பார்உனக்கீடு பார்க்கில் கடம்பன்
          மட்டோ எனப்பாரின் மூர்க்கத்தனங்கள் ...... அதனாலே

மைப்பாகெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
     புற்பாயலில் காலம் வீற்றுக் கலந்து
          வைப்பார் தமக்காசையால் பித்தளைந்து ...... திரிவேனோ

எச்சாய் மருள்பாடு மேற்பட்டிருந்த
     பிச்சாசருக்கோதி கோட்டைக்கிலங்க
          மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே

எட்டாம் எழுத்தேழையேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
          எக்காலும் மக்காத சூர்க்கொத்தரிந்த ...... சினவேலா

தச்சா மயிற்சேவலாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
          சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து ...... மணமாகித்

தப்பாமல் இப்பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
          தச்சூர் வடக்காகும் மார்க்கத்தமர்ந்த ...... பெருமாளே.



No comments:

Post a Comment