Wednesday, December 26, 2018

திருவாலங்காடு:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவள்ளூர்

திருக்கோயில்: அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், ஞான சம்பந்தர் (தேவாரம்), திருநாவுக்கரசர் (தேவாரம்),  சுந்தரர் (தேவாரம்), காரைக்கால் அம்மையார் (11ஆம் திருமுறை)


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலும், திருவள்ளூரிலிருந்து 19 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள தலம் திருவாலங்காடு. காரைக்கால் அம்மையாராலும், தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சிவபரம்பொருள் வடாரண்யேஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை வண்டார் குழலியம்மை எனும் திருநாமத்துடனும் எழுந்தருளி இருக்கின்றனர். காரைக்கால் அம்மையாரின் முத்தித் தலம். அருகிலுள்ள எல்லைக்காளி ஆலயத்திலுள்ள காளியன்னையைத் தரிசித்த பின்னரே சிவாலய தரிசனம் செய்தல் மரபு.

இத்தலத்திற்கு வருகை வரும் திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற தலமாதலின் இப்பதியில் பாதம் பதிக்கவும் அஞ்சி எல்லையிலுள்ள திருமடமொன்றினுள் தங்கியிருக்க, ஆலங்காட்டுறைப் பரம்பொருள் கனவில் எழுந்தருளி 'எம்மைப் பாட மறந்தனையோ'  என்று அருளிச் செய்ய, திருவருளை வியந்து போற்றும் சம்பந்த மூர்த்தியும் ''துஞ்ச வருவாரும்' எனும் திருப்பதிகம் பாடித் தொழுத தலம். பின்னாளில் சுந்தர மூர்த்தி சுவாமிகளும், இதே முறையில், தம்முடைய இரு கண் பார்வையையும் இழந்த நிலையிலும், தல எல்லையிலிருந்த வண்ணமே 'அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியான் ஆவேனே' எனும் திருப்பதிகத்தினால் இத்தலத்துறைச் சிவமூர்த்தியைப் போற்றப் பரவியுள்ளார்.

திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் இவ்வாலயத்தில் மூன்று திருக்கோலங்களில் எழுந்தருளி இருக்கின்றான். ஆலய முகப்பிலும், சிவசன்னிதியின் உட்பிரகாரச் சுற்றின் முதல் திருச்சந்நிதியிலும், வள்ளி தெய்வயானை தேவியரோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி இருக்கின்றான். மூன்றாவது, சிவன்னிதியின் பின்புறத்தில், வலது கோடியில், இரு தேவியரோடு, மயிலும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.

அருணகிரியார் இத்தலத்திற்கென 4 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார். பிரம்மாண்டமான திருக்கோயில், காரைக்கால் அம்மையார், தனிச்சன்னிதியில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அருகில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அற்புதத் திருக்கோலம்.

(Google Maps: Vadaranyeswarar Swamy Temple மாந்தி கோயில்,Padal Petra Temple, Thiruvalangadu, Tamil Nadu, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதானந் தானன தானன
     தனதானந் தானன தானன
          தனதானந் தானன தானன ...... தனதான

கனஆலம் கூர்விழி மாதர்கள்
     மனசாலம் சால்பழிகாரிகள்
          கனபோகம் போருகமாம்இணை ...... முலைமீதே

கசிவாரும் கீறுகிளால்உறு
     வசைகாணும் காளிம வீணிகள்
          களிகூரும் பேயமுதூணிடு ...... கசுமாலர்

மனஏலம் கீலகலாவிகள்
     மயமாயம் கீதவிநோதிகள்
          மருளாரும் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்

மதிமாடம் வான்நிகழ்வார் மிசை
     மகிழ்கூரும் பாழ் மனமாம்உன
          மலர்பேணும் தாளுனவே அருள் ...... அருளாயோ

தனதானம் தானன தானன
     எனவேதம் கூறுசொல் மீறளி
          ததைசேர்தண் பூமண மாலிகை ...... அணிமார்பா

தகர்ஏறங்கார் அசமேவிய
     குகவீரம்பா குமரா மிகு
          தகைசால் அன்பார் அடியார்மகிழ் ...... பெருவாழ்வே

தினமாம் அன்பாய் புனமேவிய
     தனிமானின் தோளுடன்ஆடிய
          தினைமா இன்பாஉயர் தேவர்கள் ...... தலை வாமா

திகழ்வேடம் காளியொடாடிய
     ஜெகதீசங்கேச நடேசுரர்
          திருவாலங்காடினில் வீறிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தானந் தாத்தம் தனதன
     தந்தானந் தாத்தம் தனதன
          தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான

பொன்றா மன்றாக்கும் புதல்வரும்
     நன்றாம் அன்றார்க்கின்றுறு துணை
          பொன்தான் என்றாட்டம் பெருகிய ...... புவியூடே

பொங்கா வெங்கூற்றம் பொதிதரு
     சிங்காரம் சேர்த்திங்குயரிய
          புன்கூடொன்றாய்க் கொண்டுறைதரும் ...... உயிர்கோல

நின்றான் இன்றேத்தும் படி!நினை
     வும்தானும் போச்சென்றுயர்வற
          நிந்தாகும் பேச்சென்பது பட ...... நிகழாமுன்

நெஞ்சால் அஞ்சால் பொங்கியவினை
     விஞ்சாதென்பால் சென்றகலிட
          நின்தாள் தந்தாட்கொண்டருள்தர ...... நினைவாயே

குன்றால் விண்தாழ்க்கும் குடைகொடு
     கன்றாமுன் காத்தும் குவலயம்
          உண்டார் கொண்டாட்டம் பெருகிய ...... மருகோனே

கொந்தார் பைந்தார்த் திண் குய!குற
     மின்தாள் சிந்தாச் சிந்தையில் மயல்
          கொண்டே சென்றாட்கொண்டருளென ...... மொழிவோனே

அன்றாலங்காட்டண்டரும்உய
     நின்றாடும் கூத்தன் திருவருள்
          அங்காகும் பாட்டின் பயனினை ...... அருள்வாழ்வே

அன்பால்நின் தாள் கும்பிடுபவர்
     தம்பாவம் தீர்த்தம் புவியிடை
          அஞ்சா நெஞ்சாக்கம் தரவல ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

புவிபுனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... இடையூடே

பொறிபுலன் ஈரைந்தாக்கி கருவிகள் நாலும் காட்டி
     புகல்வழி நாலைந்தாக்கி ...... வருகாயம்

பவவினை நூறும் காட்டி சுவமதி தானும் சூட்டி
     பசுபதி பாசம் காட்டி ...... புலமாயப்

படிமிசை போஎன்றோட்டி அடிமையை நீவந்தேத்தி
     பரகதி தானும் காட்டி ...... அருள்வாயே

சிவமய ஞானம் கேட்க தவமுநிவோரும் பார்க்க
     திருநடமாடும் கூத்தர் ...... முருகோனே

திருவளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற
     ஜெகமொடு வானம் காக்க ...... மயிலேறிக்

குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதம்தாக்கி
     குதர்வடி வேல்அங்கோட்டு ...... குமரேசா

குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்

மகனொடு மாமன் பாட்டி முதல்உறவோரும் கேட்டு
     மதிகெட மாயம் தீட்டி ...... உயிர்போமுன்

படிமிசை தாளும் காட்டி உடலுறு நோய் பண்டேற்ற
     பழவினை பாவம் தீர்த்துன் ...... அடியேனைப்

பரிவொடு நாளும்காத்து விரிதமிழால் அங்கூர்த்த
     பரபுகழ் பாடென்றாட்கொண்டருள்வாயே

முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
     முதிர்நடமாடும் கூத்தர் ...... புதல்வோனே

முருகவிழ் தாரும் சூட்டி ஒருதனி வேழம் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்

இடியென வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி
     எதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி

இலகிய வேல்கொண்டார்த்து உடலிரு கூறன்றாக்கி
     இமையவர்ஏதம் தீர்த்த ...... பெருமாளே.

(2019 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment