Monday, December 31, 2018

திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்)

திருக்கோயில்: அருள்மிகு ஞானப் பூங்கோதை அம்மை சமேத ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), நக்கீரர் (கயிலை பாதி காளத்தி பாதி - 11ஆம் திருமுறை)


தலக் குறிப்புகள்:

தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள பரம புண்ணியத் தலம், மணிவாசகப் பெருமானும் திருவாசகத்தில் இத்தலத்தினைப் போற்றியுள்ளார், நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி' எனும் தொகுப்பினை 11ஆம் திருமுறையில் அருளியுள்ளார், மேலும் நக்கீரர் மற்றும் கல்லாட தேவ நாயனார் இருவருமே தனித்தனியாய் 11ஆம் திருமுறையில் 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' எனும் தொகுப்பினை அருளியுள்ளனர். அருணகிரிப் பெருமானின் திருப்புகழ் திருப்பாடல்களையும் பெற்றுள்ள சீர்மை பொருந்திய தலம்.
*
மலையடிவாரத்தில் பிரதானத் திருக்கோயிலையும், மலையுச்சியில் கண்ணப்ப நாயனார் சிவபரம்பொருளுக்குத் தன் திருக்கண்களைப் பெயர்த்துப் பொருத்திய ஆச்சரியமான சிறிய திருக்கோயிலையும் இத்தலத்தில் தரிசித்து மகிழலாம். ஆலமுண்டருளும் ஆதிமூர்த்தி இப்பதியில் 'ஸ்ரீகாளத்தீஸ்வரர்; காளத்தியப்பர்' எனும் திருநாமங்களுடனும், உமையன்னை 'ஞானப் பிரசூனாம்பிகை; ஞானப் பூங்கோதை' எனும் திருநாமங்களுடனும் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றனர். கருவறைக்குள் சுவாமிக்கு வலதுபுறம் கண்ணப்ப நாயனார் சுமார் 4 முதல் 5 அடி உயரத் திருமேனியில் கூப்பிய திருக்கரங்களுடன் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார்.

பெரும்பாலும் கருவறைக்கு வெளியிலிருந்தே சுவாமியைத் தரிசிக்க அனுமதிக்கின்றனர், எனினும் மூலமூர்த்திக்கு வலதுபுறமுள்ள கண்ணப்பரின் அதிஅற்புதத் திருக்கோல தரிசனம் கருவறைக்குள் சென்றால் மட்டுமே கிட்டும், ஆதலின் எவ்விதமெனும் அர்ச்சகரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுத் திருச்சன்னிதியுள் புகுந்துக் கண்ணப்ப நாயனாரைத் தரிசித்தல் வேண்டும், அபிஷேகம் அல்லது சிறப்பு அர்ச்சனைக்குப் பதிவு செய்து கொண்டால் உட்செல்லும் வாய்ப்பு இயல்பாகவே அமையக்கூடும். ஞானசம்பந்த மூர்த்தி இத்தலத்திற்கு எழுந்தருளி வந்த சமயத்தில், காளத்தியப்பரின் தரிசனப் பயனாய் வலது புறம் எழுந்தருளி இருந்த கண்ணப்பரின் திவ்ய தரிசனம் சம்பந்தமூர்த்திக்குக் கிட்டியது என்று சேக்கிழார் ஆச்சரியமாய் பதிவு செய்தருளியுள்ளார் (கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்).

நமது திருப்புகழ் தெய்வம் இத்தலத்தில் ஆறுதிருமுகங்களுடன், வள்ளி; தெய்வயானை தேவியர் உடன் எழுந்தருளி இருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், நெடிதுயர்ந்த திருமேனியுடன் ஸ்ரீசெங்கல்வராய சுவாமி எனும் அற்புத திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு மூன்று திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Srikalahasti Temple, Srikalahasti, Andhra Pradesh 517644, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்தா தத்தத் தனனா தந்தத்
     தனத்தா தத்தத் தனனா தந்தத்
          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான

சரக்கேறித்தப் பதிவாழ் தொந்தப்
     பரிக்காயத்தில் பரிவோடைந்துச்
          சதிக்காரர்ப் புக்குலை மேவிந்தச் ...... செயல் மேவிச்

சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் 
     சுகித்தே சுற்றத்தவரோடின்பத்
          தழைத்தே மெச்சத் தயவோடிந்தக் ...... குடிபேணிக்

குரக்கோணத்தில் கழுநாய் உண்பக்
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக்

குறித்தே முத்திக்கு மறாஇன்பத்
     தடத்தே பற்றிச் சகமாயம் பொய்க்
          குலக்கால் வற்றச் சிவஞானம் பொற் ...... கழல்தாராய்

புரக்காடற்றுப் பொடியாய் மங்கக்
     கழைச் சாபத்தைச் சடலான் உங்கப்
          புகைத்தீ பற்றப் புகலோர் அன்புற்றருள்வோனே

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்சத்
     தனிக்கோலத்துப் புகுசூர் மங்கப்
          புகழ்ப்போர் சத்திக்கிரையாநந்தத்தருள்வோனே

திருக்கானத்தில் பரிவோடந்தக்
     குறக் கோலத்துச் செயலாள் அஞ்சத்
          திகழ்ச்சீர் அத்திக்கழல்வா என்பப் ...... புணர்வோனே

சிவப்பேறுக்குக் கடையேன் வந்துள் 
     புகச்சீர் வைத்துக் கொளு ஞானம் பொற்
          திருக்காளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான

சிரத்தானத்தில் பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே

வருத்தா மற்றொப்பிலதான
     மலர்த்தாள் வைத்தெத்தனை ஆள்வாய்

நிருத்தா கர்த்தத்துவ நேசா 
     நினைத்தார் சித்தத்துறைவோனே

திருத்தாள் முத்தர்க்கருள்வோனே
     திருக்காளத்திப் பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கயனார் பெற்றிடும் சராசரம் 
     அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
          பஞ்சவர் கூடித் திரண்டதோர் நர உருவாயே

பந்தமதாகப் பிணிந்த ஆசையில்
     இங்கிதமாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்திடாதுழல் படிறாயே

சங்கடனாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கிடா மதி
          தந்தடியேனைப் புரந்திடா உனதருளாலே

சங்கரர் வாமத்திருந்த நூபுர
     சுந்தரிஆதித் தரும் சுதா பத
          தண்டையனே குக்குடம் பதாகையின் முருகோனே

திங்கள் உலாவப் பணிந்த வேணியர்
     பொங்கரவாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத்தழுந்து பாணியர் நெடிதாழ்வார்

சிந்துவிலே உற்றெழுந்த !காளவி
     டம் கள மீதில் சிறந்த சோதியர்
          திண்புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா

சிங்கமதாகத் திரிந்த மால்!கெரு
     வம் பொடியாகப் பறந்து சீறிய
          சிம்புளதாகச் சிறந்தகா என வருகோ முன்

செங்கதிரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிடவே நற்தவம் செய்தேறிய
          தென்கயிலாயத்தமர்ந்து வாழ்வருள் பெருமாளே.


(2019 டிசம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment