Tuesday, December 25, 2018

கோசைநகர் (கோயம்பேடு):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: சென்னை

திருக்கோயில்: அருள்மிகு குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) திருக்கோயில்

தல வகை: சிவத் தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர் 


தலக் குறிப்புகள்:

சென்னையில் 'கோயம்பேடு சூப்பர் மார்க்கெட்' என்று பிரசித்தமாக அறியப் பெற்று வரும் பகுதிக்கு மிக அருகில் அமையப் பெற்றுள்ள திருத்தலம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருக்குமாரர்களான லவ குசர்கள் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம் ஆதலின் 'திரேதா யுக இறுதி மற்றும் துவாபர யுக துவக்க' கால கட்டத்திலிருந்து விளங்கி வரும் தொன்மையான தலம் என்பது தெளிவு, இந்நெடிய காலகட்டத்தில் திருக்கோயில் எண்ணிறந்த முறை செப்பனிடப் பெற்றும், புதுப்பிக்கப் பெற்றும் வந்திருக்கக் கூடும் எனினும் சிவமூர்த்தி மிகப் புராதனத் திருமேனியர். 

சற்று விசாலமான திருக்கோயில் வளாகம், வளாகத் துவக்கத்திலிருந்து பிரதான கோபுர வாயிலை அடையவே சற்று தூரம் பயணித்து வர வேண்டும், சிவமூர்த்தி சிறிய திருமேனியராய் பேரழகுத் திருக்கோலத்தில் குறுங்காலீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை தர்ம சம்வர்த்தினி. வெளிப் பிரகாரத்தினை முழுவதுமாய் வலம் வருகையில் பிரகாரச் சுற்றின் இறுதியில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், அருணகிரியார் இம்மூர்த்திக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் போற்ற வேண்டிய திருத்தலம்.

(Google Maps: SRI KURUNGALEESHWARAR TEMPLE, Virrugambakkam, Koyambedu, Chennai, Tamil Nadu 600107, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான

ஆதவித பாரமுலை மாதரிடை நூல்!வயிற
     தாலிலை எனாமதன ...... கலைலீலை

யாவும் விளைவான குழியான திரிகோணமதில்
     ஆசை மிகவாய் அடியன் ...... அலையாமல்

நாதசத கோடிமறை ஓலமிடு நூபுர!மு
     னான பதமா மலரை ...... நலமாக

நான்அநுதினா தினமுமே நினையவே கிருபை
     நாடியருளேஅருள ...... வருவாயே

சீதமதிஆடரவு ஏர்அறுகு மாஇறகு
     சீதசல மாசடில ...... பரமேசர்

சீர்மை பெறவே உதவு கூர்மைதரு வேலசிவ
     சீறிவரு மாஅசுரர் ...... குலகாலா

கோதை குறமாது குண தேவ மடமாதும் இரு
     பாலும்உற வீறிவரு ...... குமரேசா

கோசைநகர் வாழவரும் ஈசடியர் நேச!சரு
     வேச முருகா அமரர் ...... பெருமாளே

No comments:

Post a Comment