Tuesday, March 28, 2017

திருவேளைக்காரன் வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

 ஆனபய பத்திவழிபாடு பெறு முத்தி!அது
    வாக நிகழ் பத்தசன    வாரக்காரனும்   ....1  

ஆர மதுரித்த கனி காரண முதல்!தமைய
    னாருடனுன் உணக்கைபரி    தீமைக்காரனும்   ....2  

ஆகமம் விளைத்தகில லோகமு நொடிப்பளவில்
    ஆசையொடு சுற்றும்அதி    வேகக்காரனும்   ....3 

ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கி!அநு
    பூதி அடைவித்ததொரு    பார்வைக்காரனும்   ....4

ஆடலைவு பட்டமரர் நாடதுபிழைக்க!அம
    ராவதி புரக்கும்அடல்    ஆண்மைக்காரனும்   ....5

ஆடக விசித்ரகன கோபுர முகப்பில்!அரு
    ணாபுரியில் நிற்கும்    அடையாளக்காரனும்   ....6

ஆயிர முகத்து நதி பாலனும் !அகத்தடிமை
    யானவர் தொடுத்தகவி    மாலைக்காரனும்   ....7 

ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசும்
    ஆதிமுடிவற்றதிரு    நாமக்காரனும்   ....8

யான்எனதெனச் சருவும் ஈன சமயத்தெவரும்
    யாரும் உணர்தற்கரிய    நேர்மைக்காரனும்   ....9

யாதுநிலை அற்றலையும் ஏழுபிறவிக்கடலை
    ஏறவிடு நற்கருணை    ஓடக்காரனும்   ....10

ஏரகம் இடைக்கழி சிராமலை திருப்பழநி
    ஏரணிசெருத்தணியில்    வாசக்காரனும்   ....11

ஏழையின் இரட்டை வினையாயதொர் உடற்!சிறையி
    ராமல் விடுவித்தருள்    நியாயக்காரனும்   ....12  

யாமளை மணக்குமுக சாமளை மணிக்குயிலை
    ஆயென அழைத்துருகு    நேயக்காரனும்   ....13  
  
ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்
    யாக முநிவர்க்குரிய    காவற்காரனும்   ....14

ஈரிரு மருப்புடைய சோனைமத வெற்பிவரும்
    யானைஅளவில் துவளும்    ஆசைக்காரனும்   ....15 

ஏடவிழ் கடப்பமலர் கூதளமுடிக்கும் !இளை
    யோனும் அறிவிற்பெரிய    மேன்மைக்காரனும்   ....16  

வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர்
    வாவியில் உதித்தமுக    மாயக்காரனும்   ....17  

வாரண பதிக்குதவு நாரணன் உவக்கு!மரு
    மானும் அயனைக்கறுவு    கோபக்காரனும்   ....18  

வாழியென நித்தமறவாது பரவிற்சரண
    வாரிசம்அளிக்கும்    உபகாரக்காரனும்   ....19

மாடமதில் சுற்றிய த்ரிகூடகிரியிற் கதிர்செய்
    மாநகரியிற் கடவுள்    ஆயக்காரனும்   ....20  

வாளெயிறதுற்ற பகுவாய்தொறு நெருப்புமிழும்
    வாசுகி எடுத்துதறும்    வாசிக்காரனும்   ....21  

வாளகிரியைத் தனது தாளில்இடியப் பொருது
    வாகைபுனை குக்குட    பதாகைக்காரனும்   ....22

மாசில் உயிருக்குயிரும் மாசில் உணர்வுக்குணர்வும்
    வானில் அணுவுக்கணு    உபாயக்காரனும்   ....23  

வாதனை தவிர்த்த குருநாதனும் வெளிப்பட!ம
    காடவியில் நிற்பதொர் சகாயக்காரனும்   ....24 

மீனவனு மிக்க புலவோருமுறை பொற்பலகை
    மீதமர் தமிழ்த்ரய    விநோதக்காரனும்   ....25  

வேரிமது மத்தமதி தாதகி கடுக்கைபுனை
    வேணியர் துதிப்பதொரு    கேள்விக்காரனும்   ....26  

வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ
    வேலையுற விட்டதனி    வேலைக்காரனும்   ....27  

மீனுலவு கிர்த்திகை குமாரனு நினைக்கும்அவர்
    வீடுபெற வைத்தருள்    உதாரக்காரனும்   ....28  

மேனை அரிவைக்குரிய பேரனு மதித்ததிறல்
    வீரனும் அரக்கர்குல    சூறைக்காரனும்   ....29  

வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்!வி
    சாகனும் விகற்பவெகு    ரூபக்காரனும்   ....30  

வேடுவர் புனத்தில் உருமாறிமுனி சொற்படி!வி
    யாகுல மனத்தினொடு    போம்விற்காரனும்   ....31

மேவிய புனத்திதணில் ஓவியமெனத் திகழு
    மேதகு குறத்திதிரு    வேளைக்காரனே   ....32

No comments:

Post a Comment