Tuesday, March 28, 2017

போர்க்களத் தலகை வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

பகல் இரவின்றியொர் புகல்திசை நந்திய பற்பானுத்தகை
    படமுதல் விசும்பு தூர்த்தடுக்கு பிணமலை   ....1  

பவுரிவரும் பரிபுர நரல் பங்கய வித்தாரத்தன
    பயிரவி பதங்கள் வாழ்த்தெடுத்த பசியன   ....2  

பரிய கொழுந்தசை பயிரவர் என்று பலிக்கா நிற்பவர்
    பகரிடம் அறிந்து பாத்திரத்தில் இடுவன   ....3  

பரவிவருங் குறள் பசிதணியும்படி பட்டார் கைப்படு
    பரிசையின் முகந்து சூட்டிறைச்சி சொரிவன   ....4 

படுகளம் என்பதொர் செறுவில் விளைந்தன பற்கோவைப் பயில்
    பவுரிவிசை கொண்டு தீட்டி மெத்த அடுவன   ....5  

பரியணி திண்பணை முடிய மடிந்துடல் பப்பாதித் துணி
    படவிழு பெருங்கை மாக்கருக்கல் பகிர்வன   ....6  

படைவிசயந் தெரி சலதி வலம்புரி பற்றார் பட்டுள
    பலபல விதங்கள் ஆர்ப்பெடுக்கும் உதடின   ....7  

பகடுபிளந்த தன் உரிவை புனைந்திடு குப்பாயத்தன
    பதவிஅரிணஞ் செயூட்டுடுத்த உடையின   ....8  

உக முடிவன்றினும் வெருவ வரும்பல உற்பாதத்தன
    ஒளிமதி வகிர்ந்த கீற்றெயிற்று நிலவின   ....9 

உருவம் இருண்டன திகிரி விலங்கலின் உட்பாய் கிற்பன
    உலவி நிணமொண்டு கூட்டமைத்து நுகர்வன   ....10  

உததியுறுஞ் சுவ வடவை நெடுங்கனல் உட்காகப் !பெரு
    குதிரபிசிதங்கள் பேர்த்திறக்கி இடுவன   ....11  

உருமும் இடைந்தென அதிர்குரலின் தமில் ஒப்பேறிட்டு!நி
    ருதர் மவுலி கொண்டு கோட்டையிட்டு மலைவன   ....12  

உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன
    உவண படலங்கள் காக்கை சுற்றி வருவன   ....13  

உலைதரு மென்குடர் இடைபட இந்திரன் உத்யானத்தலர்
    உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன   ....14 

உயர் இபமுங் குரகத குலமுங்கன பொற்றேர் வர்க்கமும்
    உடைபடு கலங்கள் போற் சுழித்து விரைபட   ....15  

ஒழுகுதிரந்தனின் முழுகிஎழுந்தன உச்சாடத்துடன்
    உடைகடல் அதிர்ந்து கூப்பிளக்கு நடையின   ....16  

செகதலம் எங்கணும் அதிர முழங்கி அடிப்பாய் வெற்றிய
    திரள்வரை பிடுங்கி நாட்டி ஒட்டு குழையின   ....17  

சினமலி வெங்குறள் இனமொடு திண்திறல் மற்போர் கற்பன
    திசையளவு நின்று நீட்டி வைக்கும் அடியின   ....18 

திசைகள்தொறும் பல குறைகள் எழுந்து துடித்தாடச்சிறை
    செறிகழு கரங்கில் வீற்றிருக்கும் அரசின   ....19  

திமிர பிலங்கிழி படவிசை கொண்டு குதித்தாலிப்பன
    சிகரவட குன்றின் நூற்றிரட்டி நெடியன   ....20  

சிறியன கிண்கிணி அணிகுருவின் சரண த்யானத்தின
    திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி இரைவன   ....21  

திமிலை பெரும்பறை சிறுபறை நின்றதிரச் சேவித்துயர்
    சயமகள் விளங்கு வேற்கரத்தை மொழிவன   ....22  

திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தீ செக்கண
    செககண மொழிந்து கூத்தனைத்து நவில்வன   ....23  

சிலைமலி திண்புய அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்தவர்
    செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன   ....24  

நிகரில் அறம்புரி குருகல பஞ்சவர் மெய்த் தூதுக்கொரு
    நிமிடமதில் அன்று போய்க் கவித்த மணிமுடி   ....25  

நிருபர் பயங்கொள நெறுநெறெனும்படி பொற்பீடத்திடை
    நிலைபெற இருந்து நூற்றுவர்க்கும் அவரறி   ....26  

நினைவுற வன்புறும் ஒருபதினெண்குண அக்ரோணிப்படை
    நிகிலமு மடிந்து கூற்றுவற்கு நிறைவுற   ....27  

நிலமகள் வன்பொறை கடியு முகுந்தன் முதற்சேண் முட்டவு
    நெறிபட நிமிர்ந்த ஆக்கையற்கு மருமகன்   ....28  

நிமலை த்ரியம்பகி கவுரி திகம்பரி நிர்ப்பாவக்குண
    நிருமலி இரங்கு தாய் ப்ரியத்தன் அறுமகன்   ....29  

நிகரகனங் குல சிகரிதொடும் பெரு வெற்பார் உற்பல
    நிறையருவி கொஞ்ச ஓச்சியத்தில் ஒளிர்சுனை   ....30 

நியதியின் நன்கலர் தணிகை எனும்பதி நிற்பான் முற்பட
    நெடுமகர சிந்து தீப்பறக்க வெகுவித   ....31  

நிபுட துரங்க கசஇரத சங்க்ரம நிட்டூரக் கொலை
    நிருதரை முனிந்த போர்க்களத்தில் அலகையே   ....32

No comments:

Post a Comment