Sunday, July 29, 2018

பொதிய மலை:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

பாபநாசத்துக்கு அருகில், பொதிய மலை அடிவாரத்தில் முருகப் பெருமானுக்குத் தனிக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

(Google Maps: Pothigai, Papanasam R.F., Tamil Nadu 627425)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
     தத்த தத்த தான தான ...... தனதான

மைக்கணிக்கன் வாளி போல உட்களத்தை மாறி நாடி
     மட்டுமுற்ற கோதை போத ...... முடிசூடி

மத்தகத்தில் நீடு கோடு வைத்த தொத்தின் மார்பினூடு
     வட்டமிட்ட வாருலாவு ...... முலைமீதே

இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கியக்கமான பேரை
     எத்தி முத்தமாடும் வாயின் இசைபேசி

எட்டு துட்ட மாதர் பாயல் இச்சை உற்றென்ஆகமாவி
     எய்த்து நித்தமான ஈனம் உறலாமோ

துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாளஓசை
     தொக்க திக்க தோத தீத ...... எனவோதச்

சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தமாடும் ஆதி
     சொற்கு நிற்குமாறுதாரம் மொழிவோனே

திக்கு மிக்க வானினூடு புக்க விக்கம் மூடு சூரர்
     திக்க முட்டியாடு தீர ...... வடிவேலா

செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு
     செப்பு வெற்பில் சேயதான ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான

வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
     விழித்து மேகலை பதித்து வார்தொடு
          மிகுத்த மாமுலை அசைத்து நூலின் மருங்கினாடை

மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை
     துலக்கியேவிள நகைத்து கீழ்விழி
          மிரட்டி யாரையும் அழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர்

குடித்து நாயென முடக்கு மேல்பிணி
     அடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
          குலத்தர் யாவரும் நகைக்கவேஉடல் ...... மங்குவேனைக்

குறித்து நீயருகழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமும் ஒருத்தனாமென ...... சிந்தைகூராய்

உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
     திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
          உடுக்கை பேரிகை தவில்குழாமும் இரங்குபோரில்

உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
     துடிப்ப நீள்கடலெரித்து சூர்மலை
          உடைத்து நீதிகள் பரப்பியேஅவர் உம்பராரை

அடைத்த மாசிறை விடுத்து !வானுல
     களிக்கும் ஆயிர திருக்கணான்!அர
          சளித்து நாளுமென் உளத்திலே மகிழும் குமாரா

அளித்த தாதையும் மிகுத்த மாமனும்
     அனைத்துளோர்களும் மதிக்கவேமகிழ்
          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.

No comments:

Post a Comment