Sunday, July 29, 2018

ஸ்ரீபுருஷமங்கை (நாங்குநேரி)

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருநெல்வேலியிலிருந்து 34 கி.மீ தூரத்தில், நாங்குநேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற வானமாமலை பெருமாள் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இச்சிவாலயம்.

இத்தலத்திற்கு 20 கி.மீ தொலைவில் மற்றொரு திருப்புகழ் தலமான வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Sri Thirunageshwarar Temple, Kamaraj Nagar, Nanguneri, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானதன தந்த தந்தன
     தானதன தந்த தந்தன
          தானதன தந்த தந்தன ...... தனதான

ஆடல் மதனம்பின் மங்கையர் 
     ஆலவிழியின் பிறங்கொளி
          ஆரம்அதலம்பு கொங்கையின் ...... மயலாகி

ஆதிகுருவின் பதங்களை
     நீதியுடன் அன்புடன்!பணி
          யாமல்மன நைந்து நொந்துடல் அழியாதே

வேடரென நின்ற ஐம்புலன் 
     நாலு கரணங்களின் தொழில்
          வேறுபட நின்றுணர்ந்தருள் ...... பெறுமாறென்

வேடைகெட வந்து சிந்தனை
     மாயையற வென்று துன்றிய
          வேதமுடிவின் பரம்பொருள் அருள்வாயே

தாடகை உரம் கடிந்தொளிர்
     மாமுனி மகம்சிறந்தொரு
          தாழ்வற நடந்து திண்சிலை ...... முறியாஒண்

ஜாநகி தனம் கலந்தபின்
     ஊரில் மகுடம் கடந்தொரு
          தாயர் வசனம் சிறந்தவன் ...... மருகோனே

சேடன் முடியும் கலங்கிட
     வாடை முழுதும் பரந்தெழ
          தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட ...... நடமாடும் 

சீர்மயில மஞ்சு துஞ்சிய
     சோலைவளர் செம்பொனுந்திய
          ஸ்ரீபுருடமங்கை தங்கிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
     தானதன தந்த தந்த ...... தனதானா

கார்குழல் குலைந்தலைந்து வார்குழை இசைந்தசைந்து
     காதலுறு சிந்தை உந்து ...... மடமானார்

காமுகர் அகம் கலங்க போர்மருவ முந்தி வந்த
     காழ்கடிய கும்ப தம்ப ...... இருகோடார்

பேர்மருவு மந்தி தந்தி வாரண அனங்கனங்க
     பேதையர்கள் தங்கள் கண்கள் ...... வலையாலே

பேரறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை
     பீடையற வந்து நிந்தன் அருள்தாராய்

ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த
     ஏகமயில் அங்க துங்க ...... வடிவேலா

ஏமன் உமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அண்டர்
     ஈடெற இருந்த செந்தில் ...... நகர்வாழ்வே

தேருகள் மிகுந்த சந்தி வீதிகளணிந்த கெந்த
     சீரலர் குளுந்துயர்ந்த ...... பொழிலோடே

சேரவெ இலங்கு துங்க வாவிகள் இசைந்திருந்த
     ஸ்ரீபுருடமங்கை தங்கு ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான

வேனின் மதனைந்து பாணம்விட நொந்து
     வீதிதொறும் நின்ற ...... மடவார்பால்

வேளையென வந்து தாளினில் விழுந்து
     வேடைகெட நண்பு ...... பலபேசித்

தேனினும் மணந்த வாயமுதமுண்டு
     சீதள தனங்களினில் மூழ்கித்

தேடிய தனங்கள் பாழ்பட முயன்று
     சேர் கதியதின்றி ...... உழல்வேனோ

ஆனிரை துரந்து மாநிலம்அளந்தொர் 
     ஆலிலையில் அன்று ...... துயில்மாயன்

ஆயர்மனை சென்று பால் தயிரளைந்த
     ஆரண முகுந்தன் ...... மருகோனே

வானவர் புகழ்ந்த கானவர் பயந்த
     மானொடு விளங்கு ...... மணிமார்பா

மாமறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை
     மாநகர் அமர்ந்த ...... பெருமாளே.

No comments:

Post a Comment