(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்.
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தில்லை ஸ்தானம் எனும் திருநெய்த்தானம். திருவையாற்றினை முதன்மையாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது (மற்ற ஆறு தலங்கள் திருவையாறு; திருப்பழனம்; திருச்சோற்றுத்துறை; திருவேதிகுடி; திருக்கண்டியூர்; திருப்பூந்துருத்தி).
சிவபரம்பொருள் நெய்யாடியப்பராகவும், பராசத்தி பாலாம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். ஞானசமபந்த மூர்த்தி ஒரு திருப்பதிகத்தையும், அப்பர் சுவாமிகள் 5 திருப்பதிகங்களையும் அருளிச் செய்துள்ளனர்,
-
(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
மையாடிய கண்டன், மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே
(அப்பர் தேவாரம் - திருப்பாடல் 1)
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன், மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்தனைய கண்ட, நினைக்குமா நினைக்கின்றேனே
(இவ்வாலய அர்ச்சகர் திருவையாற்றுத் திருக்கோயிலிலும் தொண்டாற்றி வருவதால் நடைதிறக்க காலை 10.30 மணி வரை ஆகலாம் என்றறிந்து, அர்ச்சக்கரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, சற்று முன்னதாக வருமாறு கேட்டுக் கொண்டு, அம்மையப்பரையும், திருப்புகழ் வேலவனையும் தரிசித்து மகிழ்ந்தோம்).
பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றான். அருணகிரிப் பெருமானார் இம்மூர்த்தியை அற்புதச் சந்தத்தோடு கூடிய திருப்பாடலொன்றால் போற்றிப் பரவியுள்ளார்.
Google Maps: NCN052 Sri Neyyadiyappar Temple
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ
முனையில் காதிப் பொருகணை இனையிள
வடுவைப் பானல் பரிமள நறையிதழ்
முகையைப் போலச் சமர்செயும் இருவிழி ...... குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதல் துயரற வளநிறை
துணை பொற்தோளில் குழைவுற மனமது ...... களிகூரச்
சுடர்முத்தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத்திளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினும் உனதடி ...... மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயும் அசுரர்கள் ...... களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
குணலிட்டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநடமிடுபவர்
செறிகண் காளப் பணியணி இறையவர் ...... தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த்தானத்துறைபவ சுரபதி ...... பெருமாளே
No comments:
Post a Comment