Tuesday, October 30, 2018

திருப்பழுவூர் (கீழ்ப்பழுவூர்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: அரியலூர்

திருக்கோயில்: அருள்மிகு ஆலந்துறை நாதர் (வடமூலநாதர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

அரியலூர் மாவட்டத்தில், திருச்சியிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலும், அரியலூரிலிருந்து 12 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது கீழ்ப்பழுவூர், இங்குள்ள சிவாலயம் ஆலந்துறை.   

சிவபரம்பொருள் ஆலந்துறை நாதராகவும், அம்பிகை அருந்தவ நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். இறைவரின் திருச்சன்னிதி முன்பாக, ஒற்றைத் திருப்பாதத்தை நிலத்தில் ஊன்றியவாறு தவக்கோலத்திலுள்ள அம்மையின் திருமேனியைத் தரிசிக்கலாம். பரசுமார் வழிபட்டுப் பழி நீங்கிய திருத்தலம்.  

ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்திய பதி,
-
(ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
முத்தன்;மிகு மூவிலை நல்வேலன்; விரிநூலன்
அத்தன்; எமை ஆளுடைய அண்ணல்இடம் என்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே

பிரகாரச் சுற்றில் தனித்துவமான பேரழகுத் திருக்கோலத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், கங்காள மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, உமைமங்கை பங்கன்,  சபாபதி ஸ்ரீநடராஜர், நான்முகக் கடவுள், சிவதுர்க்கை ஆகிய தெய்வ மூர்த்தங்களைத் தரிசித்துப் போற்றி மகிழலாம்.

பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றான். அருணகிரிப் பெருமானார் இம்மூர்த்தியை ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார்.

(Google Maps: Sri Aalanthuraiyar or Vadamoolanathar Shiva Temple, National Highway 227, Paluvur, Tamil Nadu 621707, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தந்தன தாத்த தானன
     தனன தந்தன தாத்த தானன
          தனன தந்தன தாத்த தானன ...... தனதான

விகட சங்கட வார்த்தை பேசிகள்
     அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
          விரிவடங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்

விதம் விதங்களை நோக்கி ஆசையில் 
     உபரிதங்களை மூட்டியே தம
          இடுமருந்தொடு சோற்றையேயிடு ...... விலைமாதர்

சகல மஞ்சனம்ஆட்டியே முலை
     பட வளைந்திசை மூட்டியேவரு
          சரச இங்கித நேத்தியாகிய ...... சுழலாலே

சதிமுழங்கிட வாய்ப் பணானது
     மலர உந்தியை வாட்டியேயிடை
          தளரவும் கணையாட்டும் வேசியர் உறவாமோ

திகிரி கொண்டிருளாக்கியே இரு
     தமையர் தம்பியர் மூத்த தாதையர்
          திலக மைந்தரையேற்ற சூரரை ...... வெகுவான

செனமடங்கலும் மாற்றியேஉடல்
     தகர அங்கவர் கூட்டையேநரி
          திருகியுண்டிட ஆர்த்த கூளிகள் அடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
     முடிய அன்பர்களேத்தவே அரி
          அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே

அமரர் அந்தணர் போற்றவேகிரி
     கடலதிர்ந்திட நோக்கு மாமயில்
          அழகொடும் பழுவூர்க்குள் மேவிய ...... பெருமாளே


(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
























No comments:

Post a Comment