Wednesday, November 28, 2018

மாகாளம்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு மகாகாளநாத சுவாமிதிருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 23 கி.மீ தூரத்திலும், திருவீழிமிழலையிலிருந்து 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தற்கால வழக்கில் இவ்வூர் 'கோயில் திருமாகாளம்' என்று வழங்கப்பட்டு வருகின்றது.

(Google Maps: Kovil Thirumakalam Periya kovil, Sannathi Street Kovil Thirumalam, Poonthottam, Tamil Nadu 609503, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானான தானதன தானதன தானதன
     தானான தானதன தானதன தானதன
          தானான தானதன தானதன தானதன ...... தனதான

காதோடு தோடிகலி ஆடவிழி வாள்சுழல
     கோலாகலார முலை மார்புதைய பூணகல
          காரோடு கூடளக பார மலரோடலைய ...... அணைமீதே

காலோடு கால்இகலி ஆடபரி !நூபுரமொ
     டேகாசமான உடை வீசியிடை நூல்துவள
          காவீரமான இதழூறல்தர நேசமென ...... மிடறோதை

நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
     மார்போடு தோள் கரமொடாடிமிக நாணழிய
          நானா விநோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை

நானாரு நீயெவன் எனாமல் எனதாவி கவர்
     சீர்பாதமே கவலையாயும் உனவே நிதமும் 
          நாதா குமார முருகா எனவும் ஓதஅருள் ...... புரிவாயே

பாதாள சேடனுடல் ஆயிர பணாமகுட
     மாமேரொடேழு கடல் ஓதமலை சூரருடல்
          பாழாக தூளி விணிலேற புவி வாழவிடு ...... சுடர்வேலா

பாலாழி மீதரவின் மேல்திருவொடே அமளி
     சேர்நீலரூபன் வலி ராவணகுழாம் இரிய
          பாரேவை ஏவிய முராரிஐவர் தோழன்அரி ...... மருகோனே

மாதா புராரி சுகவாரிபரை நாரியுமை
     ஆகாச ரூபி அபிராமி வலமேவு சிவன்
          மாடேறியாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா

வானோர்கள் ஈசன்மயிலோடு குறமாது!மண
     வாளா குகாகுமர மாமயிலின் மீதுதிரு
          மாகாள மாநகரில் மாலொடடியார் பரவு ...... பெருமாளே.

No comments:

Post a Comment