(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: திருவாரூர்
திருக்கோயில்: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருவாரூரிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அம்பர் பெருந்திருக்கோயில் (தற்கால வழக்கில் அம்பல்). சோமாசி மாற நாயனாரின் அவதாரத் தலம். கோச்செங்க சோழ நாயனார் எழுப்பியுள்ள ஆலயம். மற்றொரு சிவத்தலமான அம்பர் மாகாளம் இங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரு ஆலயங்களுக்கும் தனித்தனியே தேவாரத் திருப்பதிகமும், திருப்புகழ் திருப்பாடலும் உண்டு.
ஞானசம்பந்த மூர்த்தி பாடிப் பரவியுள்ள சிறப்புப் பொருந்தியது பெருந்திருக்கோயில்.
-
(திருப்பாடல் 1)
எரிதர அனல் கையில்ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே
மூலக்கருவறைக்குப் படிகளேறிச் செல்லுதல் வேண்டும், திருச்சன்னிதியில் பிரம்மபுரீஸ்வரப் பரம்பொருள் சிவலிங்கத் திருமேனியிலும், அதன் பின்னர் அம்மையோடு உருவத் திருமேனியிலும் எழுந்தருளி இருக்கின்றார்.
வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரோடு கூடிய நின்ற திருக்கோலத்தில், சுப்பிரமணியன் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்.
(Google Maps: Ambal Brahma Pureeswarar Temple, Ambal, Tamil Nadu 609503, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தான தந்தனம் தான தந்ததன
தான தந்தனம் தான தந்ததன
தான தந்தனம் தான தந்ததன ...... தந்ததான
சோதி மந்திரம் போதகம் பரவு
ஞானகம் பரந்தேயிருந்த வெளி
தோடலர்ந்தபொன் பூவிருந்த இடமுங் கொளாமல்
சூது பந்தயம் பேசிஅஞ்சுவகை
சாதி விண்பறிந்தோடு கண்டர்மிகு
தோதகம் பரிந்தாடு சிந்துபரி ...... கந்துபாயும்
வீதி மண்டலம் பூணமர்ந்துகழி
கோல மண்டி நின்றாடி இன்பவகை
வேணுமென்றுகண் சோர ஐம்புலன் ஒடுங்கு போதில்
வேதியன் புரிந்தேடு கண்டளவில்
ஓடி வெஞ் சுடுங்காடணைந்து சுட
வீழ்கி வெந்துகுந்தீடும் இந்த இடர் என்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேரவும்பரம
சோம மண்டலம் கூடவும்பதும
வாளன் மண்டலம் சாரவுஞ் சுழி படர்ந்த தோகை
ஆழி மண்டலந் தாவி அண்ட!முத
லான மண்டலந் தேடி ஓன்றதொ!மு
கான மண்டலஞ் சேடனங்கணயில் ...... கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெழுந்து!பொடி
யாகி விண் பறந்தோட மண்டியொரு
சூரியன் திரண்டோட கண்டுநகை ...... கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கை!மய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரும் அம்பர்வளர் ...... தம்பிரானே
(2024 டிசம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment