(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: கரூர்
திருக்கோயில்: அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
குளித்தலையின் பிரதானப் பகுதியில் அமையப்பெற்றுள்ள திருத்தலம் (தற்கால வழக்கில் "கடம்பர் கோயில்" என்று பிரசித்தமாக அறியப்பெற்று வருகின்றது).
கண்வ முனிவருக்கு இறைவர் கடம்ப மரத்தில் திருக்காட்சியளித்து அருள் புரிந்த பதி. அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது,
-
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மலரான், பல தேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
நீண்ட விசாலமான ஆலய வளாகம், சிவபரம்பொருள் கடம்பவனேஸ்வரராகவும், இறைவி முற்றிலாமுலையம்மையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். பிரகாரச் சுற்றின் துவக்கத்திலுள்ள நவகிரக சன்னிதிகளுக்கு நேரெதிரிலுள்ள திருச்சுவற்றில் நவகிரக சுப்ரமண்யராய் நம் கந்தப் பெருமான் திருக்காட்சி தருகின்றான், வேறெங்கிலுமில்லாத தனித்துவமான அமைப்பிது.
உட்பிரகாரச் சுற்றின் பின்புறம் விநாயகப் பெருமான் (வழக்கமான இடதுபுறத்தில் அல்லாது) வலது புறத்தில் எழுந்தருளி இருக்கின்றார்.
இதற்கடுத்ததாக அமைந்துள்ள திருச்சன்னிதியுள் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடும், தேவியரோடும், மயில் மீதமர்ந்து திருக்காட்சி தருகின்றான்.
இச்சன்னிதியின் வலதுபுறத்தில் (சன்னிதிக்கு வெளியில்) பிரகாரச் சுற்றிலும் அதே அமைப்புடன் கந்தப் பெருமான் திருக்காட்சி தருகின்றான்.
'எக்காரணத்தால் ஒரே அமைப்புடனான இருவேறு திருமேனிகள் அருகருகே அமைந்துள்ளன?' என்று ஆலய அர்ச்சகர்களுள் ஒருவரான சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களிடம் கேட்க, அரிய பல குறிப்புகளை அவர் வாயிலாக அறிந்து வியப்புற்றோம்.
1936ஆம் ஆண்டு குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயத்தில், ஷண்முகப் பெருமானின் திருமேனியில் சிறிய பின்னமொன்று ஏற்பட, விரைந்து புதியதொரு திருமேனியை அதே அமைப்புடன் செய்விக்கின்றனர். இது குறித்து கந்தப் பெருமானிடம் உத்தரவு கேட்க, 'திருமேனியை அகற்ற வேண்டாம்' என்பதாக வேலவனின் திருவுளக் குறிப்பு வெளிப்படுகின்றது.
-
எனினும் புதிய திருமேனியையும் 1962ஆம் ஆண்டு அருகிலேயே (சன்னிதிக்கு வெளியில்) பிரகாரச் சுற்றில் பிரதிஷ்டை செய்கின்றனர்.
ஆதலின், திருச்சன்னிதியுள் எழுந்தருளியுள்ள பெருமானே அருணகிரியாரால் பாடல் பெற்றுள்ள ஆதி மூர்த்தியாவார்.
கந்தப்பெருமானுக்கு நேரெதிரில் அருணகிரியார் வணங்கிய திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 'இம்மூர்த்தி 1912ஆம் ஆண்டு குடமுழுக்கு சமயத்தில் எழுந்தருளப் பெற்றுள்ளார்' என்பதாக அறிகின்றோம்.
கந்தப்பெருமானுக்கு நேரெதிரில் அருணகிரியார் வணங்கிய திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 'இம்மூர்த்தி 1912ஆம் ஆண்டு குடமுழுக்கு சமயத்தில் எழுந்தருளப் பெற்றுள்ளார்' என்பதாக அறிகின்றோம்.
அருணகிரியார் இத்தலத்துறை வேலவனைப் பின்வரும் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.-
(Google Maps: Arulmigu Sri Kadambavaneswarar Temple, Kulithalai)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
புணரியும் அனங்கன் அம்புஞ் சுரும்புங்!கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்
புது நிலவருந்தியும் துஞ்சுநஞ்சும் பொருப்பெறிவேலும்
பொருவென இகன்றகன்றங்குமிங்குஞ்!சுழன்
றிடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்திங்கிதம்
புவிஇளைஞர் முன் பயின்றம்பொனின் கம்பிதக் ...... குழை மோதிக்
குணலையொடும் இந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
படிஅமர் புரிந்தருஞ் சங்கடஞ் சந்ததம்
கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கி தங்குங் கடைக் ...... கணினார்பால்
குலவுபல செந்தனந் தந்து தந்தின்புறும்
த்ரிவித கரணங்களுங் கந்தநின் செம்பதம்
குறுகும்வகை அந்தியுஞ் சந்தியுந் தொந்தம் அற்றமைவேனோ
துணர்விரி கடம்பமென் தொங்கலும் பம்புறும்
புழுகும் அசலம்பசுஞ் சந்தனங் குங்குமம்
தொகு களபமுந் துதைந்தென்று நன்கொன்றும் பத்திருதோளும்
தொலைவில் சண்முகங்களும் தந்த்ர மந்த்ரங்களும்
பழநிமலையும் பரங்குன்றமும் செந்திலும்
துதிசெயுமெய் அன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப் ...... பதிவாழ்வாய்
கணபண புயங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவும் அறுகுங் குறும் தும்பையும் கொன்றையும்
கமழ்சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா
கன குடகில் நின்ற குன்றந் தரும் சங்கரன்
குறுமுனி கமண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
கதிசெய்நதி வந்துறுந் தென்கடம்பந்துறைப் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment