(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (தென்கரை)
மாவட்டம்: கரூர்
திருக்கோயில்: அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கரூர் மாவட்டத்தில், குளித்தலையிலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம். ஐயர்மலை; இரத்தினகிரீஸ்வரர் கோயில் என்று பிரசித்தமாய் அறியப் பெற்று வருகின்றது. அருணகிரிப் பெருமானார் ரத்தின வெற்பு; ரத்னகிரி; மாணிக்ககிரி என்று இத்தலத்தினைப் போற்றுகின்றார்.
சுமார் 1100 படிகளைக் கொண்ட மலைக்கோயில். மேலே செல்ல வின்ச் சேவை உள்ளது, எனினும் உடலில் சக்தியுள்ள வரையில் படிகளேறிச் சென்று இறைதரிசனம் செய்வதே உத்தமமான மரபு (தரிசித்துத் திரும்புகையில் வின்ச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்). சற்று கடினமான பயணம், ஆங்காங்கே சிறிது சிறிதாக ஓய்வெடுத்து மேலேறிச் செல்ல சுமார் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் தேவைப்படும்.
மலைக்கோயிலை அடைவதற்குச் சுமார் 200 படிகளுக்கு முன்னதாகவே சுரும்பார் குழலியம்மையின் திருச்சன்னிதி அமையப் பெற்றுள்ளது. அற்புதப் புன்னகையோடு கூடிய திருமுகத்துடன் அம்மை நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். வணங்கிப் போற்றி மேலும் முன்னேறிச் செல்கின்றோம்.
இரத்தினகிரீஸ்வரப் பரம்பொருள் நெடிதுயர்ந்த பிரமாண்டமான திருமேனியோடு அதி அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். சிவலிங்கத் திருமேனியின் மேற்புறம் வளைவாக அல்லாமல், அடியவனான அரசனொருவனால் வடுப்பேற்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றார்.
அகத்திய மாமுனி இங்கு மதியவேளையில் அருள் பெற்றிருந்த காரணத்தால் இவ்வாலயத்தில் பிற்பகல் 12 மணி அபிஷேகமும் பூஜையும் மிக விசேடம். இறைவருக்கு 'மத்தியான சுந்தரர்' எனும் திருப்பெயருமுண்டு.
அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தினால் மாணிக்கமலைப் பரம்பொருளைப் போற்றி செய்து வணங்கினோம்,
-
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பாலகர் விருத்தர் பழையார் எனார்
ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்
சீலமார்ந்தவர் செம்மையுள் நிற்பரே
குடமுழுக்குத் திருப்பணிகள் நடந்தேறி வருவதால் இறைவர்; இறைவி திருச்சன்னிதிகள் தவிர மற்ற திருமேனிகள் யாவும் பாலாலயம் செய்யப் பெற்றிருப்பதனை அறிந்தோம். பெரும் ஏக்கத்தோடு ஆறுமுகக் கடவுளின் (பூட்டியிருந்த) திருச்சன்னிதிக்கு அருகாமையில் நின்றவாறு இத்தலத்திற்கான மூன்று திருப்புகழ் திருப்பாடல்களையும் பாராயணம் புரிந்து போற்றினோம்.
(Google Maps: Arulmigu Rathnagireeswarar Temple, Ayyarmalai)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
கயலைச் சருவிப் பிணையொத்தலர்பொற்
கமலத்தியல் மைக் ...... கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட்டெழு மைக் ...... குழலாலே
நயபொற் கலசத்தினை வெற்பினை!மிக்
குளநற் பெரு செப்பிணையாலே
நலமற்றறிவற்றுணர்வற்றனன் நல்
கதியெப்படி பெற்றிடுவேனோ
புயலுற்றியல் மைக் கடலிற் புகு!கொக்
கறமுற் சரம் உய்த்தமிழ்வோடும்
பொருதிட்டமரர்க்குறு துக்கமும்!விட்
டொழியப் புகழ் பெற்றிடுவோனே
செயசித்திர முத்தமிழ் உற்பவநற்
செபமுற் பொருளுற்றருள் வாழ்வே
சிவதைப் பதிரத்தின வெற்பதனில்
திகழ் மெய்க் குமரப் ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
சுற்ற கபடோடுபல சூதுவினையானபல
கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர்!சலி
சுற்றவிழலான பவிஷோடு கடல் மூழ்கிவரு ...... துயர்மேவித்
துக்க சமுசாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில் மெழுகானவுடல்
சுத்தமறியாத பறிகாயமதில் மேவிவரு ...... பொறியாலே
சற்றுமதியாத கலிகாலன்வரு நேரமதில்
தத்துஅறியாமலொடி ஆடிவரு சூதரைவர்
சத்த பரிசான மண ரூபரசமான பொய்மை ...... விளையாடித்
தக்க மடவார் மனையை நாடியவரோடு பல
சித்து விளையாடுவினை சீசியிது நாறவுடல்
தத்தி முடிவாகி விடுவேனொ முடியாதபதம் அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம்
திக்குமுகிலாட அரியாட அயனாடசிவன்
ஒத்து விளையாட பரையாட வரராட பல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே
எத்திசையும் நாடி யமனார் நிணமொடாட பெல
மிக்கநரியாட கழுதாட கொடியாடசமர்
எற்றிவரு பூதகணமாட ஒளியாடவிடு ...... வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தம்அலை காமுக குகா நமசிவாயனொடு
ரத்நகிரி வாழ்முருகனே இளையவா அமரர் ...... பெருமாளே
திருப்பாடல் 3:
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி
முத்தனாம் ஆறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமாதான சற்குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்கிரி வாசா
வித்தகா ஞான சத்திநிபாதா
வெற்றிவேலாயுதப் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment