(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி தென்கரை)
மாவட்டம்: திருச்சி
திருக்கோயில்: அருள்மிகு உச்சிநாதர் (உய்யக்கொண்ட நாதர்) திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருச்சி மாவட்டத்தில் - திருவானைக்கா திருக்கோயிலிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் (25 நிமிட பயணத் தொலைவில்) அமைந்துள்ளது கற்குடி, பிரசித்தமாக உய்யக்கொண்டான் மலை என்று வழங்கப் பெற்று வருகிண்றது.
கோபுர வாயிலில் நுழைந்ததும் நேரெதிரில் உற்சவ மண்டபமொன்று அமைந்துள்ளது. இங்கு கந்தக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், தேவியரும் உடனிருக்க, கற் திருமேனியில் எழுந்தருளி இருக்கின்றான்.
இம்மண்டபத்தினின்றும் வெளிப்பட்டு அருகிலேயே அமைந்துள்ள வாயிலின் வழியே படிகளேறிச் சென்று, பின்னர் அங்கிருந்து மீண்டும் மற்றொரு புறத்திலுள்ள படிகளேறிச் சென்றால் கற்குடி மலைக்கோயில் ஆலயத்தினைத் தரிசிக்கலாம்.
சிவபரம்பொருள் உஜ்ஜீவநாத சுவாமியாகவும், அம்மை அஞ்சனாக்ஷியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள திருத்தலம்.
அஞ்சனாக்ஷி அம்மையின் திருக்கரத்திலுள்ள மலர் இதழொன்றில் பின்னம் ஏற்பட, பிறிதொரு திருமேனியைச் செய்வித்து பிரதிஷ்டை செய்ய முனைகையில், 'மூலத் திருமேனியை மாற்ற வேண்டாம்' என்பதாக அம்பிகையின் திருவுள்ளக் குறிப்பு வெளிப்பட, புதிய திருமேனியைப் பாலாம்பிகை எனும் திருப்பெயரில் புதியதொரு திருச்சன்னிதியில் எழுந்தருளச் செய்கின்றனர். இவ்விரு சன்னிதிகளுக்குமே பூஜைகள் நடந்தேறி வருகின்றன.
அஞ்சனாக்ஷி அம்மை பிரகாரச் சுற்றின் துவக்கத்தில் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். 'இம்மூர்த்தியே திருப்புகழ் பெற்றுள்ள மூர்த்தி' என்று அருகிலுள்ள பலகையொன்று அறிவிக்கின்றது.
இறைவர் பிரகாரச் சுற்றின் துவக்கத்திலும் கந்தப்பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க, இரு தேவியரோடும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
(குறிப்பு: இறைவர்; இறைவி பிரகாரச் சுற்றுகளின் தரைத்தளங்களில் டைல்ஸ் பதிக்கப் பெற்றுள்ளது ஆகம நியமத்துக்கு புறம்பானதாகும். அடுக்கு மாடிக் குடியிருப்பின் தளமொன்றிற்கு வந்தது போன்ற உணர்வினையே இத்தரைத்தளம் தருகின்றது. விரைவில் கற்தளம் அமைய வேண்டும் என்பதே விண்ணப்பம், திருவருள் துணை நிற்கட்டும்).
அருணகிரியார் இத்தலத்துறை வேலவனை மூன்று திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார், இரு திருப்பாடல்களில் கற்குடி என்றும் மற்றொன்றில் 'ராஜ கம்பீர வளநாடு' என்றும் குறிக்கின்றார். ஆலயக் கல்வெட்டொன்றிலும் 'ராஜ கம்பீர வளநாடு' எனும் திருப்பெயர் குறிக்கப் பெற்றுள்ளது.
(Google Maps: Uyyakondan Thirumalai, MM Nagar, Sholanganallur, Tamil Nadu 620102, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் ...... தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத் தத்துவத்துத் தவர் சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத் ...... தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத்திளைப்பற்றிருக்கப்
புரித்துப் பதத்தைத் ...... தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திச்சை உற்றுப் ...... பரிவாகக்
கனக்க ப்ரியப்பட்டகப்பட்டுமைக்கண்
கடைப்பட்டு நிற்கைக்குரியோனே
தடத்துற்பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித்த கொற்றத் ...... தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக் கற்குடிக்குப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான
நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி
நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய்
நினைத்துக் கொடத் துக்கத்தை
அவத்தைக் கடுக்கைப் பெற்று
நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
உகைத்துத் துடிக்கப் பற்றி
இழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட்பட்ட
இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப்பட்டு ...... அலையாமல்
மொழிக்குத் தரத்துக்குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
அயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே
உனைச்சொல் துதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
உடைக் கற்குடிக்குள் பத்தர் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
(குறிப்பு: 'ராசகெம்பீர வள நாடு' சோழ நாட்டிலுள்ள கற்குடியைக் குறிப்பது - சிவத்திரு. தணிகைமணி அவர்கள்)
தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன
தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான
மாக சஞ்சாரமுகில் தோற்ற குழல்கொடு
போக இந்த்ராதி சிலை தோற்ற நுதல்கொடு
மான வண்டேறு கணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல
மாலர் கொண்டாடுகனி தோற்ற இதழ்கொடு
சோலை சென்றூது குயில் தோற்ற இசைகொடு
வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
போக பண்டார பணி தோற்ற அரைகொடு
தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்து காசு
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என!உற
வாடுகின்றேனை மல நீக்கி ஒளிதரு
சீவனொன்றான பரமார்த்த தெரிசனை ...... வந்துதாராய்
வேகமுண்டாகிஉமை சாற்றும் அளவினில்
மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
வீரன்என்பானொரு பராக்ரன் எனவர ...... அன்றுசோமன்
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
வீழநன் பாரதியு(ம்) மூக்கு நழுவிட ...... வந்தமாயன்
ஏகநின்றாகிஅமர் தோற்று வதறிட
வேகஉங்காரமொடு ஆர்க்க அலகைகள்
ஏறி வென்றாடு கள(ம்) நீக்கி முநிவரர் ...... வந்துசேய்!என்
றீச நண்பான புருஷார்த்த தெரிசனை
தாஎனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
ராசகெம்பீர வள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment