(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருக்கோயில்: அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
காரைக்காலிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருப்புகலூரிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள திருத்தலம். ஞானசம்பந்தப் பெருமான் இரு திருப்பதிகங்களையும், அப்பர் சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளனர். சிறுத்தொண்ட நாயனாரின் முத்தித் தலம்.
இத்தலத்தினைத் தோற்றுவித்தவர் விநாயகப் பெருமானாவார், கஜமுகாசுர சம்ஹார நிகழ்விற்குப் பின்னர் வேழ முகக் கடவுள் இங்கொரு சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து பூசித்ததால் கணபதீஸ்வரம். குருதிப் பெருக்கினால் பூமி சிவந்ததால் செங்காட்டங்குடி.
இறைவர் கணபதீஸ்வரராகவும், அம்பிகை திருக்குழல் உமைநங்கையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். சிறுத்தொண்டரின் இல்லத்திற்குப் பைரவ வேடத்தினராய் எழுந்தருளி வந்த உத்திராபதீஸ்வரரின் திருக்கோலத்தினைத் தனிச்சன்னிதியில் தரிசிக்கலாம். சிறுத்தொண்டரின் இல்லம் ஆலயத்திற்கருகிலுள்ள மற்றொரு சாலையில் அமைந்துள்ளது.
பிரமாண்டமான ஆலய வளாகம், சிறுத்தொண்டர் - அவரது திருத்துணைவியார் - புதல்வனான சீராளன் - பிள்ளைக்கறி சமைத்த சந்தன நங்கை எனும் தாதியர் ஆகியோர் தனிச்சன்னிதியில் அருகருகே கூப்பிய கரங்களுடன் திருக்காட்சி தருகின்றனர்.
பிரகாரச் சுற்றின் பின்புறம் குமரப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை ஒரு திருப்புகழ் திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.
(Google Maps: SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழல் ஆரமொடு தோள்புரள
வண்காதில் ஓலைகதிர் போலஒளி வீசஇதழ் ...... மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி ஆகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீர்உறவெனாசை மயலிடுமாதர்
சங்காளர் சூதுகொலைகாரர் குடிகேடர் சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசிஅவர் மாயவலையோடடியென் உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீச உபதேசமது
தண்காதிலோதிஇரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகன நமோநமென
கந்தா குமாரசிவ தேசிக நமோநமென
சிந்தூர பார்வதி சுதாகர நமோநமென ...... விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவ நமோநமென
கங்காள வேணிகுருவானவ நமோநமென
திண்சூரர்ஆழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே
இங்கீத வேதபிரமாவை விழ மோதியொரு
பெண்காதலோடு வனமேவி வளி நாயகியை
இன்பான தேனிரச மார்முலை விடாதகர ...... மணிமார்பா
எண்தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு
செங்காடு மேவி பிரகாசமயில் !மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுகவா அமரர் ...... பெருமாளே
(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment