Monday, November 26, 2018

நாகப்பட்டினம் (நாகை):

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு காயரோகண சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

காரைக்காலிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில், நாகப்பட்டினத்தின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம். அதிபத்த நாயனாரின் முத்தித் தலம். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

விசாலமான ஆலய வளாகம், அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட கற்கோயில். இவ்வருடத் துவக்கத்தில் நடந்தேறிய குடமுழுக்கினால் திருக்கோயில் புதுப் பொலிவுடன் மிளிர்கின்றது.

இறைவர் பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனியில் காயாரோகண சுவாமியாக எழுந்தருளி இருக்கின்றார், இத்திருமேனியின் பின்புறம் சற்று உயரத்தில் இறைவரும் அம்மையும் உருவத் திருக்கோலத்தில் சிறிய திருமேனியராய் எழுந்தருளி இருக்கின்றனர் (வெள்ளிக் கவசத்துடன் திருக்காட்சி தருகின்றனர்). இறைவி நீலாயதாட்சியாய் எழுந்தருளி இருக்கின்றாள், அற்புதத் திருக்கோலம்.

பிரகாரச் சுற்றின் பின்புறம் குமரப் பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க,மயில்பின்புரம் விளங்கியிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அற்புத வேலைப்பாடுகளோடும், திருத்தமான அவயவங்களோடும் கூடிய திருமேனி, ஆனந்தத் திருக்காட்சி. அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 3 திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார். 

அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி பிரமாண்டமான திருமேனியோடு திருக்காட்சி தருகின்றாள். பைரவர் திருச்சன்னிதி இங்கு விசேடம், நெடிதுயர்ந்த திருமேனியோடு பிரகாரச் சுற்றில் பைவரர் திருக்காட்சி தருகின்றார். வெளிப்பிரகாரச் சுற்றின் துவக்கத்தில் தனிச்சன்னிதியில் வணங்கும் திருக்கோலத்திலுள்ள அதிபத்த நாயனாரைத் தரிசித்து வணங்கி மகிழலாம்.  

சம்பந்த மூர்த்தி 2 திருப்பதிகங்களையும், அப்பர் சுவாமிகள் 4 திருப்பதிகங்களையும், சுந்தரர் ஒரு திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளனர்.

(Google Maps: Neelayadhakshi Amman samedha Kayarohana Swami Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை வட்டமிட்டஇந்த
     ஊர்முகில் தருக்களொன்றும் அவர்!ஆரென்

றூமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்தரென்றும்
     ஊனரை ப்ரபுக்களென்றும் அறியாமல் 

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்குரைத்தநந்த
     கோடியிச்சை செப்பி வம்பில் உழல்நாயேன்

கோபமற்று மற்றுமந்த மோகமற்றுனைப் பணிந்து
     கூடுதற்கு முத்தியென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்திஅம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெடுத்துகந்த ...... சிறியோனே

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த
     வாகை மற்புய ப்ரசண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
     நாரணற்கருள் சுரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனைக் களைந்த
     நாகபட்டினத்தமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

மார்புரம்பின் நளினங் கிரியெனுந் !தனமொ
     டாரமும் படி தரம்பொறியுடன் பணிகள்
          மாலையொண் பவளமும் பரிமளங் கலவை ...... தொங்கலாட

வாள்சரங்கண் இயலுங் குழை தளம்பளக
     பார தொங்கலணி பெண்கள் வதனங்கள்மதி
          வாகையென்ப இதழுஞ் சலசம்என்பகள ...... சங்குமோக

சாரமஞ்சள் புயமுங் கிளி முகங்கள்உகிர்
     பாளிதம் புனை துவண்டிடையொடின்பரச
          தாழியென்ப அல்குலுந்துளிர் அரம்பைதொடை ...... ரம்பைமாதர்

தாள்சதங்கை கொலுசும் குலசிலம்பும்!அணி
     யாடல் கொண்டமட மங்கையருடன் கலவி
          தாகமுண்டுழல்கினுங் கழலுறுங் கழல் மறந்திடேனே

வீர வெண்டையம் முழங்கவரி சங்கு!முர
     சோடு பொன்பறை ததும்ப விதியும் சுரரும்
          வேத விஞ்சையருடன் குமுற வெந்துக அடர்ந்தசூரன்

வீறடங்க முகிலுங் கமற நஞ்சுடைய
     ஆயிரம்பகடு கொண்ட உரகன்!குவடு
          மே கொளுந்தபல் சிரந்தனை எறிந்து நடனங்கொள்வேலா

நாரசிங்க வடிவங்கொடு !ப்ரசண்டிரணி
     யோன் நடுங்க நடனஞ்செய்து இலங்கைவலி
          ராவணன்குலம் அடங்கசிலை கொண்ட கரர் ...... தந்தமூல

ஞானமங்கை அமுதஞ்சொருபி என்றனொரு
     தாய்அணங்கு குறமங்கையை மணந்தபுய
          நாகையம்பதி அமர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே

திருப்பாடல் 3:
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

விழுதாதெனவே கருதாதுடலை
     வினை சேர்வதுவே ...... புரிதாக

விருதா வினிலே உலகாயத!மே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா !கிடநா
     ளடைவே கழியாதுனை ஓதி

அலர் தாளடியேன் உறவாய் மருவோர் 
     அழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவேர் அடியோடறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணாலயனே
     சுகிர்தா அடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவேல் 
     இறைவா எனை ஆளுடையோனே

இறைவா எதுதா அதுதா தனையே
     இணை நாகையில்வாழ் ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

























No comments:

Post a Comment