Monday, November 26, 2018

சிக்கல்

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

திருக்கோயில்: அருள்மிகு நவநீதேசுவரர் (வெண்ணை இலிங்கேஸ்வரர்) திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருவாரூர் - நாகப்பட்டினம் மார்க்கத்தில், திருவாரூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலும்,அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sikkal Sri Navatheeswsrar Temple, Nagapattinam Road, Poravachery, Sikkal, Tamil Nadu 611108, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தன்ன தத்த தனத்த தானன
     தன்ன தத்த தனத்த தானன
          தன்ன தத்த தனத்த தானன ...... தனதான

கன்னலொத்த மொழிச்சொல் வேசியர்
     வன்மனத்தை உருக்கு லீலையர்
          கண்வெருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்

கையிலுற்ற பொருட்கள் யாவையும்
     வையெனக்கை விரிக்கும் வீணியர்
          கைகள் பற்றியிழுத்து மார்முலை ...... தனில்வீழப்

பின்னி விட்ட சடைக்குளே மலர்
     தன்னை வைத்து முடிப்பை நீயவிழ் 
          என்னும்அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல் 

பெய்யு முத்தமிழில் தயாபர
     என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
          பிஞ்ஞகர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய்

வன்னியொத்த படைக்கலாதிய
     துன்னு கைக்கொள்அரக்கர் மாமுடி
          மண்ணிலற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே

மன்னு பைப்பணிஉற்ற நீள்விடம் 
     என்ன விட்டு முடுக்கு சூரனை
          மல்லுடற்று முருட்டு மார்பற ...... அடைவாகச்

சென்னி பற்றியறுத்த கூரிய
     மின்னிழைத்த திறத்த வேலவ
          செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா

செம்மனத்தர் மிகுத்த மாதவர்
     நன்மை பெற்ற உளத்திலேமலர்
          செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
 தனதன தத்தத் தந்தான தானன
     தனதன தத்தத் தந்தான தானன
          தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா

புலவரை ரக்ஷிக்கும் தாருவே!மது
     ரிதகுண வெற்பொக்கும் பூவை மார்முலை
          பொருபுய திக்கெட்டும் போயுலாவிய ...... புகழாளா

பொருவரு நட்புப் பண்பான வாய்மையில் 
     உலகிலுனக்கொப்புண்டோ எனாநல
          பொருள்கள் நிரைத்துச் செம்பாகமாகிய ...... கவிபாடி

விலையில் தமிழ்ச்சொற்குன் போல்உதாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
          வெறிகொள் உலுத்தர்க்கென் பாடு கூறிடு ...... மிடிதீர

மிகஅருமைப்பட்டுன் பாத தாமரை
     சரணமெனப் பற்றும் பேதையேன் மிசை
          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையும் அருள்வாயே

இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
     சிலைநுதல் மைக்கண் சிந்தூர வாணுதல்
          இமயமகட்குச் சந்தானமாகிய ...... முருகோனே

இளைய கொடிச்சிக்கும் பாகசாதனன் 
     உதவும்ஒருத்திக்கும் சீலநாயக
          எழிலியெழில் பற்றும்காய மாயவன் ...... மருகோனே

அலர்தரு புட்பத்துண்டாகும் வாசனை
     திசைதொறு முப்பத்தெண் காதம் வீசிய
          அணிபொழிலுக்குச் சஞ்சார மாமளி ...... இசையாலே

அழகிய சிக்கல் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும்
          அசுரரை வெட்டிச் சங்காரமாடிய ...... பெருமாளே



No comments:

Post a Comment