Monday, November 26, 2018

கீரனூர்:

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: திருவாரூர் 

திருக்கோயில்: அருள்மிகு அன்னை ஷீராம்பிகை சமேத ஸ்ரீசிவலோகநாதர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

மயிலாடுதுறையிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவிலும், திருமணஞ்சேரியிலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத் திருத்தலம். 

ஆலயம் அவசியம் செப்பனிடப்பட வேண்டிய நிலையிலுள்ளது, திருப்பணிகள் மெதுமெதுவே நடந்தேறி வருவதாக அறிகின்றோம். 

இறைவர் சிவலோகநாத சுவாமியாகவும், அம்மை ஷீராம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். 

வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் கந்தப்பெருமான் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு, தேவியரும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியைப் பின்வரும் ஒரு திருப்பாடலால் போற்றிப் பரவுகின்றார்.

(குறிப்பு: புதுக்கோட்டையிலும் கீரனூர் எனும் ஊர் உள்ளது, எனினும் வலையப்பேட்டை திரு. கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' எனும் ஆய்வு நூலில் 'திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலமே திருப்புகழ் தலமென்று உறுதிப் படுத்தியுள்ளார்). 

(Google Maps: Sri Sivalokanathar Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஈரமோடு சிரித்து வருத்தவும்
     நாதகீத நடிப்பில் உருக்கவும்
          ஏவராயினும் எத்திஅழைக்கவு(ம்) ..... மதராஜன்

ஏவின் மோது கணிட்டு மருட்டவும்
     வீதிமீது தலைக்கடை நிற்கவும்
          ஏறுமாறு மனத்தி(ல்) நினைக்கவும் ...... விலைகூறி

ஆர பார தனத்தை அசைக்கவும் 
     மாலைஓதி குலைத்து முடிக்கவும்
          ஆடை சோர அவிழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக

ஆசை போல்மன இஷ்டம் உரைக்கவும் 
     மேல்விழா வெகு துக்கம் விளைக்கவும்
          ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ

பாரமேரு பருப்பத மத்தென
     நேரிதாக எடுத்துடன் நட்டுமை
          பாகர்ஆரப் படப்பணி சுற்றிடு ...... கயிறாகப்

பாதி வாலி பிடித்திட மற்றொரு
     பாதி தேவர் பிடித்திட லக்ஷுமி
          பாரிசாத முதற்பல சித்திகள் ...... வருமாறு

கீர வாரிதியைக் !கடைவித்ததி
     காரியாய் அமுதத்தை அளித்த!க்ரு
          பாளுவாகிய பச்சுரு அச்சுதன் ...... மருகோனே

கேடிலா அளகைப் பதியிற் பல
     மாட கூட மலர்ப் பொழில் சுற்றிய
          கீரனூர்உறை சத்தி தரித்தருள் ...... பெருமாளே

(2025 நவம்பர் மாதம் மேற்கொண்ட எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)









No comments:

Post a Comment