Thursday, December 27, 2018

திருக்கழுக்குன்றம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: வேலூர்

திருக்கோயில்: அருள்மிகு வேதகிரீஸ்வரர் (மலைக் கோயில்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக் கோயில்).

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), மணிவாசகர் (திருவாசகம்)


தலக் குறிப்புகள்:

சென்னையிலிருந்து 74 கி.மீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 55 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 14 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்றுள்ள தலமான திருக்கழுக்குன்றம்.

நால்வர் பெருமக்களாலும் பாடல் பெற்றுள்ள புண்ணியத் தலம், மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவடிவாய்த் திருக்காட்சி அளித்து அருள் புரிந்த தலங்களுள் கழுக்குன்றமும் இடம்பெறுகின்றது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள தாழக்கோயிலில் முக்கண் முதல்வர் 'ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்' எனும் திருநாமத்திலும், உமையன்னை 'திரிபுரசுந்தரி' எனும் திருநாமத்திலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், திருப்புகழ் தெய்வம் ஆறு திருமுகங்களுடனும், இரு தேவியரோடு கூடிய, நெடிதுயர்ந்த நின்ற திருக்கோலத்தில் அதி அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான், இந்த ஆலயத்திலிருந்து சுமார் 1/2 கி.மீ தூரத்தில், 12 ஆண்டுக்கு ஒரு முறை சங்கு தோன்றும் 'சங்கு தீர்த்தக் குளம்' அமைந்துள்ளது. தாழக் கோயிலிலிருந்து மற்றொரு புறம் 1/2 கி.மீ தூரம் பயணித்தால், சில திருச்சன்னிதிகளோடு கூடிய பிரமாண்டமானதொரு மண்டபத்தை அடையலாம், இங்கிருந்து தான் மலைக் கோயிலுக்கான படிகள் துவங்குகின்றது (சுமார் 500 படிகள்).

மலைக் கோயிலில், கருவறையினுள் செல்லும் வாயிலில் ஒரு புறம் ஸ்ரீவிநாயகப் பெருமானும் மற்றொரு புறம் திருப்புகழ் தெய்வமான ஆறுமுகப் பெருமானும் எழுந்தருளி இருக்கின்றனர். ஆறு திருமுகங்களோடும், ஆயுதங்கள் ஏந்திய பன்னிரு திருக்கரங்களோடும் மயில் மீதமர்ந்த திருக்கோலம், அழகு, அழகு, அழகு, இம்மூர்த்தியின் திருமுகப் பொலிவினையும், புன்முறுவலையும் தரிசிப்பது பிறவிப் பயனை நல்கவல்லது. இம்மலைக்கோயிலுள் போதுமான வெளிச்சம் இருப்பதில்லை ஆதலால் அலைபேசி வெளிச்சத்தின் துணை கொண்டு அறுமுக தெய்வத்தின் திருமேனி அழகினை அணுஅணுவாகப் பருகிப் பின் மூலக் கருவறைக்குச் சென்று கழுக்குன்றப் பரம்பொருளான வேதகிரீஸ்வரரை உச்சிக் கூப்பிய கையினராய்த் தொழுகின்றோம், ஆச்சரியத் திருக்கோலம்.

வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், கருவறைச் சன்னிதியின் வெளிப்புறத்தில், சற்றே உள்வாங்கிய அமைப்பில், மூன்று இடங்களில் தனித்தனித் திருக்கோலங்களில் சிவமூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார், அவசியம் அர்ச்சகரிடம் அத்திருக்கோலங்களை விளக்குமாறு விண்ணப்பித்துத் தரிசித்தல் வேண்டும், இங்கும் அலைபேசியின் உதவி கொண்டே தரிசிக்க இயலும்.

தாழக் கோயில் மற்றும் மலைக்கோயில் இரண்டிற்குமாய்ச் சேர்த்து அருணகிரிப் பெருமான் 4 மணிமணியான திருப்பாடல்களை அருளியுள்ளார். அவற்றுள் வேதவெற்பிலே எனும் திருப்பாடலைப் பரம குருநாதரான வாரியார் சுவாமிகள் பாடக் கேட்பது சிவானுபவத்தை நல்க வல்லது. 

(Google Maps: Arulmigu Vedagiriswarar Temple, Adivaram Street, Tirukazhukundram, Tamil Nadu 603109, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனத்த தத்தம் தத்தன தானன
     தனத்த தத்தம் தத்தன தானன
          தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான

அகத்தினைக் கொண்டிப்புவி மேல்சில
     தினத்து மற்றொன்றுற்றறியாது பின்
          அவத்துள் வைக்கும் சித்தசனார்அடு ...... கணையாலே

அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
     நகைத்துரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
          அலக்கணில் சென்றுத் தடுமாறியெ ...... சிலநாள்போய்

இகத்தை மெய்க் கொண்டிப்புவி பாலர்பொன்
     மயக்கில்உற்றம் பற்றை விடாதுடல்
          இளைப்பிரைப்பும் பித்தமுமாய் நரை ...... முதிர்வாயே

எமக்கயிற்றின் சிக்கி நிலா முனுன்
     மலர்ப்பதத்தின் பத்திவிடா !மன
          திருக்கும் நற்தொண்டர்க்கிணையாக உனருள்தாராய்

புகழ்ச்சிலைக் கந்தர்ப்பனுமே பொடி
     படச் சிரித்தண் முப்புரம் நீறுசெய்
          புகைக்கனல் கண் பெற்றவர் காதலி ...... அருள்பாலா

புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய்!அர
     சனைத்து முற்றும் செற்றிடவே பகை
          புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன் ...... மருகோனே

திகழ்க் கடப்பம் புட்பமதார் புய
     மறைத்துருக் கொண்டற்புதமாகிய
          தினைப் புனத்தின்புற்றுறை பாவையை ...... அணைசீலா

செகத்தில் உச்சம் பெற்றமராவதி
     அதற்கும் ஒப்பென்றுற்றழகே செறி
          திருக்கழுக்குன்றத்தினில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
     இலகும்அரன் மூவர் ...... முதலானோர்

இறைவியெனும் ஆதி பரை முலையினூறி
     எழும் அமிர்த நாறு ...... கனிவாயா

புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
     புநிதனென ஏடு ...... தமிழாலே

புனலில் எதிரேற சமணர் கழுவேற
     பொருத கவி வீர ...... குருநாதா

மழுவுழை கபால டமரக த்ரிசூலம் 
     அணிகர விநோதர்  ...... அருள்பாலா

மலர்அயனை நீடு சிறைசெய்தவன் வேலை
     வளமை பெறவே செய் ...... முருகோனே

கழுகுதொழு வேதகிரி சிகரி வீறு
     கதிருலவு வாசல் ...... நிறை வானோர்

கடல் ஒலியதான மறை தமிழ்களோது
     கதலிவன மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தத்த தனந்த தனா தனாதன
     தான தத்த தனந்த தனா தனாதன
          தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான

ஓலமிட்ட சுரும்பு தனா தனா!என
     வே சிரத்தில் விழும்கை பளீர் பளீரென
          ஓசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை

ஓர் மிடற்றில் எழும்புள் குகூ குகூவென
     வேர்வை மெத்தஎழுந்து சலா சலாவென
          ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன்

ஆலயத்துளிருந்து குபீர் !குபீரென
     வே குதிக்க உடம்பு விரீர் விரீரென
          ஆரமுத்தம் அணிந்து அளா அளாஎன ...... மருவுமாதர்

ஆசையிற்கை கலந்து சுமா சுமாபவ
     சாகரத்தில் அழுந்தி எழா எழாதுளம்
          ஆறெழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ

மாலையிட்ட சிரங்கள் செவேல் செவேலென
     வேலெழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
          வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன்

மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீலென
     பேய்குதிக்க நிணங்கள் குழூ குழூவென
          வாய்புதைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரம்ஆறாய்

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
     மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீலென
          மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... இசைகள்கூற

வேலெடுத்து நடந்த திவாகராசல
     வேடுவப்பெண் மணந்த புயாசலா தமிழ்
          வேதவெற்பில் அமர்ந்த க்ருபாகராசிவ ...... குமரவேளே.

திருப்பாடல் 4:
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான

வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும்...... அபிராம
     வேடுவச்சி பாதபத்ம மீதுசெச்சை ...... முடிதோய

ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி ...... புயநேய
     ஆதரத்தோடாதரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே

காதுமுக்ர வீரபத்ர காளிவெட்க ...... !மகுடாமா
     காச முட்ட வீசிவிட்ட காலர்பத்தி ...... இமையோரை

ஓதுவித்த நாதர்கற்க ஓதுவித்த ...... முநிநாண
     ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த ...... பெருமாளே.

(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment