Thursday, December 27, 2018

வட சிற்றம்பலம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: காஞ்சிபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு பாலகுஜாம்பாள் சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

மதுராந்தகப் பகுதியில் இரு திருப்புகழ் தலங்கள் அமைந்துள்ளன, 'மதுராந்தகம் முருகன் கோயில்' என்று பிரசித்தமாக அறியப்பெற்று வரும் சிறு ஆலயம், புலிப்பரக் கோயில் எனும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்; இதுவே 'வட சிற்றம்பலம்' எனும் தலமுமாகும்.

வெகுகாலமாக மதுராந்தகப் பகுதியிலுள்ள சிறு முருகன் ஆலயமே 'வட சிற்றமபலம்' என்று தவறாகக் கருதப்பட்டு வந்தது, திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய பெரிய ஆய்வினால் 'வட சிற்றம்பலம்' எனும் தலம் 'புலிப்பரக் கோயிலில் அமைந்துள்ள அபிதகுஜாம்பிகை சமேத ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயமே' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிக் கண்டறியப் பெற்றுள்ளது.

காஞ்சிபுர மாவட்டம்; மதுராந்தக வட்டத்தில் அமைந்துள்ளது 'புலிப்பரக் கோயில்' எனும் சிற்றூர். சென்னையிலிருந்து மதுராந்தகம் செல்லும் பயண மார்க்கத்தில், மதுராந்தகத்திற்கு 20 கி.மீ முன்னர், படலம் எனும் ஊரிலிருந்து 2 கி.மீ பயணித்தால் புலிப்பரக் கோயிலை அடையலாம்.

வியாக்ரபாரதருக்கு நடராஜப் பெருமான் இத்தலத்தில் அருள் புரிந்துள்ள காரணத்தால் மூலமூர்த்தி 'வியாக்ரபுரீஸ்வரர்' என்று போற்றப் பெறுகின்றார், சிவசன்னிதிக்குச் செல்லும் வழியில், ஆலய முகப்பில் இருபுறமும் விநாயகப் பெருமானும், சிறிய திருமேனியராய் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுளும் எழுந்தருளி இருக்கின்றனர்.

அருணகிரிநாதர் மதுராந்தகத்திலுள்ள சிறு முருகன் ஆலயத்தை 'மதுராந்தக மாநகரம்திகழ் முருகாந்திரமோடமர் உம்பர்கள் தம்பிரானே' என்றும் மற்றொரு தலத்தினை 'மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்தமர்ந்த பெருமாளே' என்றும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகின்றார், இரு திருப்புகழ் திருப்பாடல்களை வட சிற்றம்பலத்துக்கு அருளியுள்ளார்.

வரலாறு இவ்விதமிருக்க ஏனோ இன்றும் மதுராந்தகப் பகுதியிலுள்ள சிறு முருகன் ஆலயத்தையே ஆலயக் குழுவினரும் மற்றும் அப்பகுதியிலுள்ளோரும் 'வட சிற்றம்பலம்' என்று கருதி வருகின்றனர், இவ்வாலயத்திலுள்ள திருச்சுவற்றிலும் வட சிற்றம்பலத்துடைய திருப்புகழே பொறிக்கப் பெற்றுள்ளது. அவசியம் மதுராந்தகப் பகுதிக்கு யாத்திரை மேற்கொண்டு இவ்விரு திருப்புகழ் தலங்களையும் தரிசித்துப் பயன்பெறுவோம்.


(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

குதிபாய்ந்து இரத்தம் வடிதொளைத்!தொக்
     கிந்த்ரியக் குரம்பை... வினைகூர்தூர்

குண பாண்டமுற்றகிலமெனக் கைக்
     கொண்டிளைத்து அயர்ந்து... சுழலாதே,

உதிதாம் பரத்தை உயிர்கெடப் பொற்
     கிண்கிணிச் சதங்கை... விதகீத

உபயாம்புயப் புணையை இனிப்!பற்
     றும் கருத்தை என்று... தருவாயே

கதை சார்ங்க கட்கம் வளை அடற்!சக்
     ரம் தரித்த கொண்டல்... மருகோனே

கருணாஞ்சனக் கமலவிழிப் பொற்
     பைம்புனக் கரும்பின்... மணவாளா

மதனாந்தகர்க்கு மகவெனப் !பத்
     மம் தனில் பிறந்த... குமரேசா

மதுராந்தகத்து !வடதிருச்சிற்
     றம்பலத்தமர்ந்த... பெருமாளே!!!

திருப்பாடல் 2:
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

சயிலாங்கனைக்குருகி !இடப்பக்
     கம் கொடுத்த கம்பர்...வெகுசாரி

சதி தாண்டவத்தர் சடையிடத்துக்
     கங்கை வைத்த நம்பர்... உரைமாளச்

செயல் மாண்டு சித்தம் அவிழ நித்தத்
     தவம் பெறப் பகர்ந்த... உபதேசம்

சிறியேன் தனக்கும் உரைசெயில்!சற்
     றும் குருத்துவம்... குறையுமோ தான்

அயில் வாங்கி எற்றி உததியில் !கொக்
     கன் தனைப் பிளந்து சுரர்வாழ

அகிலாண்டமுற்று நொடியில் !சுற்
     றும் திறல் ப்ரசண்ட முழுநீல

மயில்தாண்ட விட்டு முதுகுலப் பொற்
     குன்றிடித்த சங்க்ரம விநோதா,

மதுராந்தகத்து வட!திருச்சிற்
     றம்பலத்தமர்ந்த பெருமாளே.

(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment